ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..
டெல்லி : அகில இந்திய அளவில் மத்திய தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்திய நேர்முகத் தேர்வின் முடிவுகள் இன்று மாலை வெளியாகிறது.
அகில இந்திய அளவில் மத்திய தேர்வாணையம் ஆண்டு தோறும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான பணிகளுக்கான தேர்வை நடத்துகிறது. முதலில் முதல்நிலை தேர்வும், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின்தேர்வும், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு என 3 நிலைகளாக நடத்தப்படுகிறது.
அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 24 ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. 1,364 பணியிடங்களுக்கான அந்த தேர்வை 9 லட்சம் பேர் எழுதினர்.
இதற்கான தேர்வு முடிவு கடந்த அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் இந்தியா முழுவதும் இருந்து 17 ஆயிரம் பேர் வெற்றி பெற்றனர்.
டிசம்பர் 14-ந்தேதி பிரதான தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை சென்னையில் மட்டும் 900 பேர் எழுதினார்கள். இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
பிரதானத் தேர்வில் நாடு முழுவதும் 3 ஆயிரத்து 293 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. தேர்வின் இறுதி முடிவு இன்று மாலை வெளியிடப்படுகிறது.
இந்த நேர்முகத் தேர்வு முடிவுகளை upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
நேர்முகத்தேர்வு முடிந்த நான்கு நாட்களுக்குள் இறுதி முடிவுகள் வெளியிடப்படுப்படுவது இதுவே முதல் முறையாகும்.