காஷ்மீரில் 2 அமெரிக்கர்கள் அதிரடி கைது! ஸ்ரீநகர் ஏர்போர்ட்டில் பரபரப்பு.. ₹2 கோடி வரை பாயும் சட்டம்
ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இரு அமெரிக்கக் குடிமகன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள சாட்டிலைட் போனை எடுத்து வந்ததாக இவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.. இரு அமெரிக்கர்களை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தியாவின் எல்லை மாநிலங்களில் முக்கியமானது காஷ்மீர். பாகிஸ்தான் உடன் எல்லையைப் பகிர்ந்து இருப்பதால் அங்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சத்தில் இருக்கும். எல்லையில் கண்காணிப்பு தீவிரமாக இருக்கும். மேலும், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் கூட தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள். அந்தளவுக்குப் பலத்த பாதுகாப்பு எப்போதுமே இருக்கும்.

அமெரிக்கர்கள் கைது
இந்தச் சூழலில் தான் தடை செய்யப்பட்ட பொருளைக் கொண்டு வந்ததாகச் சொல்லி இரு அமெரிக்கர்கள் காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் நடந்த வழக்கமான சோதனையில், அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இருவர் சாட்டிலைட் போனுடன் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மொண்டானா பகுதியைச் சேர்ந்த ஜெஃப்ரி ஸ்காட் என்பவர் இன்று ஞாயிற்றுக்கிழமை தனது சக பயணியுடன் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். வழக்கமான ஸ்கேனிங் சோதனையின்போது, ஜெஃப்ரியின் உடைமைகளில் ஏதோ ஒன்று அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. பையைத் திறந்து சோதித்தபோது, அதற்குள் 'கார்மின்' (Garmin) நிறுவனத்தின் சாட்டிலைட் போன் ஒன்று இருந்தது.
சாட்டிலைட் போன்
இந்தியாவில் எல்லாரும் இஷ்டத்திற்கு சாட்டிலைட் போன் வைத்துக் கொள்ள முடியாது. அதற்காகத் தனியாக அனுமதி பெற வேண்டும். அனுமதி இல்லாமல் இதுபோல சாட்டிலைட் போன் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். இதனால் இருவரும் உடனடியாகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் எதற்காகக் காஷ்மீர் வந்தனர்.. அவர்கள் நிஜமாகவே சுற்றுலாப் பயணிகள் தானா.. அவர்களுக்கு வேறு எதாவது திட்டம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை, பாதுகாப்பு காரணங்களுக்காக சாட்டிலைட் போன்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் உண்டு. இது போன்ற நவீனத் தகவல் தொடர்பு கருவிகளைப் பயன்படுத்துவதற்கு இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் எழுத்துப்பூர்வமான முன் அனுமதி பெறுவது கட்டாயம். இந்த அனுமதி இல்லாமல் கருவிகளை வைத்திருந்தால் இந்தியத் தந்திச் சட்டம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்முறை இல்லை
அதேநேரம் இந்தியாவின் ரூல்ஸ் தெரியாமல் இதுபோல சாட்டிலைட் போன் எடுத்து வந்து வெளிநாட்டினர் சிக்குவது இது முதல்முறை இல்லை.. கடந்த ஆண்டு மே மாதம், புதுச்சேரி விமான நிலையத்தில் அமெரிக்கக் கண் மருத்துவர் ஒருவர் 'இரிடியம்' போனுடன் சிக்கினார். அதேபோல, சீன மற்றும் பிரிட்டிஷ் நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்தியாவில் சாட்டிலைட் கருவிகளுடன் பிடிபட்டுச் சட்டச் சிக்கல்களில் சிக்கியுள்ளனர்.
ரூ.2 கோடி அபராதம்
இது போன்ற தவறுகளைத் தவிர்க்க, கடந்த 2025 ஜனவரி 30-ம் தேதி சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, இந்தியாவுக்கு வரும் அனைத்து விமானங்களிலும் சாட்டிலைட் போன்களுக்குத் தடை என்பது குறித்து அறிவிப்புகளை வெளியிட வேண்டும். அமெரிக்கா மற்றும் லண்டன் போன்ற நாடுகள், தங்களது குடிமக்களுக்கு விடுத்துள்ள பயண ஆலோசனையிலும், "இந்தியாவிற்குச் சாட்டிலைட் கருவிகளைக் கொண்டு சென்றால் ₹2 கோடி வரை அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்" என எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications