மோடியைச் சந்திக்கிறார் நான்சி பவல்: முடிவுக்கு வருகிறதா 9 ஆண்டு அமெரிக்க விசா இழுபறி...?
டெல்லி: குஜராத் முதல்வரும், பாஜக பிரதம வேட்பாளருமான நரேந்திர மோடியை இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் நான்சி பவல் சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் கலவரத்தைக் காரணம் காட்டி, மோடிக்கு விசா வழங்க அனுமதி மறுத்து வருகிறது அமெரிக்கா. கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த சர்ச்சைக்கு விரைவில் முற்றுப்புள்ளி கிடைக்க இருக்கிறது.
சமீபகாலமாக மோடிக்கு விசா வழங்குவதில் எங்களுக்கு எந்தவிதப் பிரச்சினையும் இல்லை என சூசகமாக அமெரிக்கா தெரிவித்து வந்தது. இந்நிலையில், தற்போது மோடியை இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் நான்சிபவல் சந்திக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

வெற்றி வாய்ப்பு....
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பிரதம வேட்பாளரான மோடிக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. இந்நிலையில், மோடி பிரதமரானால் அவருடன் நல்லதொரு உறவைத் தொடருவோம் என ஏற்கனவே அமெரிக்கா தெரிவித்து இருந்தது.

தேவ்யானி கைது....
இதற்கிடையே கடந்தாண்டு இறுதியில், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தேவ்யானி கைது விவகாரத்தால் இந்திய-அமெரிக்க உறவில் விரிசல் விழும் சூழ்நிலை உண்டானது. எனவே, இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு மோடியைச் சந்திக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

காந்திநகரில் சந்திப்பு...
நான்சி, மோடியை இந்தவார இறுதியில் சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான முன் அனுமதியை பெற்றிருப்பதாக அமெரிக்க தூதரத் தகவல்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றன.மோடி-நான்சி சந்திப்பு காந்திநகரில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

முக்கியச் சந்திப்பு...
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் மோடியைச் சந்திக்க இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகிறது.












Click it and Unblock the Notifications