உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல்: 45 வேட்பாளர்களை முதல் கட்டமாக அறிவிக்கிறது காங்கிரஸ்?
டேராடூன்: உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 45 வேட்பாளர்களை ஓரிருநாட்களில் காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் பிப்ரவரி 14-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மார்ச் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. முதல்வராக பாஜகவின் புஷ்கர்சிங் தாமி பதவி வகித்து வருகிறார். அவருக்கு முன்னதாக தீரத்சிங் ராவத் சில மாதங்கள் முதல்வராக இருந்தார். தீரத்சிங் ராவத்துக்கு முன்னதாக திரிவேந்தரசிங் ராவத் சுமார் 4 ஆண்டுகாலம் முதல்வராக இருந்தார். கடந்த 5 ஆண்டுகளில் பாஜக 3 முதல்வர்களை மாற்றியிருப்பது அம்மாநில மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரையில் 2002-ல் முதல் சட்டசபை தேர்தல் தொடங்கி கடந்த 20 ஆண்டுகளில் என்.டி.திவாரி மட்டுமே 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்தார். காங்கிரஸ் மற்றும் பாஜகவில் பெரும்பாலும் நிலையாக முதல்வர் பதவி வகித்தவர்கள் என எவரையும் சொல்ல முடியாத அளவு இரு கட்சிகளிலும் உட்கட்சி பூசல் கொடிகட்டிப் பறக்கிறது.
உத்தரகான்ட் சட்டசபைத் தேர்தலில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். பாஜக மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தாலும் காங்கிரஸ் கோஷ்டி பூசல் இதனை அறுவடை செய்ய முடியாத அளவுக்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் தம்மை காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அண்மையில் கலகக் குரல் எழுப்பியிருந்தார்.
இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சி தமது முதல் வேட்பாளர் பட்டியலை ஓரிருநாட்களில் வெளியிட உள்ளது. முதல் கட்டமாக 45 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவிக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications