உத்தரகாண்ட்டில் பொது சிவில் சட்டத்திற்கு கேபினட் ஒப்புதல்.. மசோதா 6 ஆம் தேதி தாக்கல்?
டேராடூன்: பாஜக ஆட்சி நடைபெற்று வரும் உத்தரகாண்டில், பொது சிவில் சட்டத்திற்கு கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. வரும் 6 ஆம் தேதி வரைவு மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யபட உள்ளது.
பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள் கொண்ட பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா. இங்கு கிரிமினல் சட்டங்கள் ஒரே மாதிரியாக உள்ளன. ஆனால், சிவில் விவகாரங்களில் அப்படி இல்லை. சிவில் சட்டங்கள் என்பது மதங்களைப் பொறுத்து மாறுகிறது. இந்த நிலையை மாற்றி நாடு முழுக்க ஒரே பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது பாஜகவின் திட்டங்களில் ஒன்றாகும்.

பிரதமர் மோடியே அண்மையில் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக பேசினார். இரண்டு வகையான சட்டங்களை கொண்டு நாட்டை நடத்த முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அனைவரும் சமம் என்றும் குறிப்பிட்டனர். எனவே, நாடு முழுக்க ஒரே பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பேசியிருந்தார்.
பொது சிவில் சட்டத்தை அப்பட்டமாக ஆதரித்து பேசிய பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. இதனை தொடர்ந்து, உத்தரகாண்டில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்து இருந்தார். மேலும் பொது சிவில் சட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவானது வரைவு அறிக்கையை தயார் செய்து இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், உத்தரகாண்டில் பொதுசிவில் சட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல்வர் புஷ்கர் சிங் தாமி இல்லத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, "இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பொது சிவில் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட்டுள்ளது. இதை சட்டமாக்குவதற்கான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்டில், சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் வரும் 5 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 6 ஆம் தேதி வரைவு மசொதா தாக்கல் செய்யபட உள்ளது. சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். அதன்பிறகு உரிய நடைமுறைகளுக்கு பிறகு சட்டமாகும். இந்த சட்டம் அமல்படுத்தப்படும் பட்சத்தில் நாட்டிலேயே யுசிசியை அமல்படுத்தும் முதல் மாநிலம் உத்தர்காண்ட் ஆக இருக்கும். கோவாவில் போர்ச்சுக்கீசிய ஆட்சி இருக்கும் வரை இந்த சட்டம் அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications