என்னது டெல்லியில் கேதார்நாத் கோவில் கட்டுவதா? இமயமலை கடும் குளிரில் போராட்டம் நடத்திய அர்ச்சகர்கள்!
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள இந்துக்களின் புனித ஆலயங்களில் ஒன்றான கேதார்நாத் கோவிலை டெல்லியில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. டெல்லியில் கோவில் கட்டுவதைக் கண்டித்து கேதார்நாத்தில் இமயமலையின் கடும் குளிரில் அர்ச்சகர்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர்.
இமயமலையில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி என்பது இந்துக்கள் புனித யாத்திர செல்ல வேண்டிய தலங்கள். இந்துக்கள் தங்கள் வாழ்நாளில் இந்த 4 புனிதத் தலங்களுக்கும் சென்று வழிபட விரும்புவர். இமயமலையின் நடுவே உள்ள 4 புனித தலங்களுக்கும் சென்று வருவதற்கு இறை அருள் தேவை என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆண்டில் 6 மாதங்கள் சென்று மட்டுமே இறைவனை வழிபடக் கூடிய 4 புனித ஆலயங்களில் ஒன்றான கேதார்நாத்தை சுற்றிதான் இப்போது சர்ச்சைகள் மையம் கொண்டிருக்கிறது.

வடமேற்கு டெல்லியில் கேதார்நாத் கோவிலை அப்படியே பிரதிபலிக்கும் வகையிலான புதிய கோவில் கட்டப்பட உள்ளது. இதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது ஆகம விதிகளுக்கும் இந்துமத நம்பிக்கைகளுக்கும் எதிரானது என்பது சங்கராச்சாரியார்கள் உள்ளிட்டோர்கள் எதிர்ப்பு. கேதார்நாத் கோவில் குறித்து சிவபுராணத்திலேயே தெளிவாக இமயமலையில் இருப்பதுதான் என குறிப்பிடப்பட்டுள்ளது; டெல்லியில் இருப்பதாக எங்கும் சொல்லப்படாத நிலையில் ஏன் இப்படி செய்ய வேண்டும் என்பதும் அவர்களின் கேள்வி.
இந்த நிலையில் டெல்லியில் கேதார்நாத் கோவில் கட்டுவதற்கு எதிராக கேதார்நாத் கோவில் அர்ச்சகர்கள், இமயமலையின் கடும் குளிரில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். மேலும் கேதார்நாத் கோவிலில் மாயமான 228 கிலோ தங்க நகைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதனிடையே இன்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த ஜோதிர்மட சங்கராச்சாரியார், 228 கிலோ தங்க நகைகள் மாயமான விவகாரத்தை மறைத்தும் திசைதிருப்பவுமே டெல்லியில் கேதார்நாத் கோவிலைக் கட்டுகின்றனர். இதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இதனை ஏற்கவும் முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications