உத்தரகாண்ட் சுரங்க பாதையில் சிக்கிய 40 பேர் கதி என்ன? 24 மணிநேரத்தை கடந்தும் நீடிக்கும் மீட்பு பணி!
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்க பாதை இடிபாடுகளில் சிக்கிய 40 பேரை மீட்கும் பணிகள் 24 மணிநேரத்தை தாண்டியும் நீடிக்கிறது. சுரங்க பாதையில் சிக்கிய 40 பேர் கதி என்ன என்பது இதுவரை தெரியாததால் பதற்றம் நீடிக்கிறது.
இமயமலை மாநிலமான உத்தரகாண்ட்டில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கட்டப்பட்டு வருகிறது. உத்தரகாசி மாவட்டம் சில்க்யாரா- தண்டல்கான் கிராமங்களை இணைப்பதற்காக இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது.

இந்த சுரங்கப்பாதையின் ஒரு பகுதி நேற்று அதிகாலையில் இடிந்து விழுந்தது. இந்த சுரங்கப் பாதை பணியில் 40 பேர் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதனையடுத்து சுரங்கப் பாதை இடிந்து விழுந்தது தொடர்பாக தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு நேற்று காலை முதல் தற்போது வரை தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உத்தரகாண்ட் சுரங்க பாதை இடிபாடுகளில் சிக்கியவர்கள் பீகார், இமாச்சல், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிஷா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். ஜேசிபி, இயந்திரங்கள் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமியை பிரதமர் மோடி அழைத்து மீட்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இது குறித்து முதல்வர் புஷ்கர் தாமி கூறுகையில், பிரதமர் மோடி தொடர்பு கொண்டு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார். மத்திய, மாநில பேரிடர் மீட்பு படையினர் முழு வீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்களுக்கு உணவு உள்ளிட்டவை உள்ளே அனுப்பி வைக்கப்படுகிறது. அனைவரையும் பாதுகாப்பாக மீட்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.












Click it and Unblock the Notifications