மூவரின் தூக்கு ரத்து: ராம் ஜெத்மலானிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து சொன்ன வைகோ
டெல்லி: ராஜிவ் வழக்கில் மூன்று தமிழரின் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானிக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
ராஜிவ் வழக்கில் மூன்று தமிழரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் முருகன் சார்பாக ஆஜரானவர் ராம்ஜெத்மலானி. சாந்தன் மற்றும் பேரறிவாளன் தரப்பில் யுக் மொகித் சவுத்ரி ஆஜராகி வந்தார்.
இந்த வழக்கு விசாரணை நடைபெறும் போதெல்லாம் உச்சநீதிமன்றத்தில் வைகோவும் வழக்கறிஞர் உடையோடு ஆஜராகிவிடுவார். இன்று மூன்று தமிழர் தூக்கு ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு வெளியான நிலையில் வழக்கில் சிறப்பாக வாதடியதற்காக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார் வைகோ.
பாரதிய ஜனதா கட்சியில் இருந்த ராம்ஜெத்மலானி, அக்கட்சி தலைமையுடன் மோதியதால் சஸ்பென்ட் செய்யப்பட்டவர். தற்போது பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் இருக்கிறார் மதிமுக பொதுச்செயலர் வைகோ என்பதும் குறிப்பிடத்தக்கது.