இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன்: வைகோ
டெல்லி: இலங்கைத் தமிழர்களுக்கு அந் நாட்டு அரசும் ராணுவமும் இழைத்துள்ள கொடுமைகளுக்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
"சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு' (எச்.ஆர்.டி.ஐ.) அமைப்பின் இரண்டு நாள் சர்வதேச மாநாடு டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.
"புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களின் மனித உரிமை நிலைமை' எனும் தலைப்பில் இந்திய சட்டக் கல்வி நிறுவன மாநாட்டுக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் வைகோ பேசியதாவது:
இலங்கைப் போரின்போது அந் நாட்டு ராணுவம் மேற்கொண்ட இன அழிப்பு நடவடிக்கையால் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழர்கள் இந்த பூமிப் பந்தின் பழமையான குடிகள் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் துறையினர், மானுடவியலாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஈழத் தமிழர்களும் இலங்கையின் பூர்விகக் குடிகள். அங்கு ஈழத் தமிழர்களும் சிங்களர்களும் தனித் தனியாக ஆட்சி செய்த வரலாறும் உண்டு. ஆனால், இலங்கையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய ஈழத் தமிழர்களை சிங்களர்கள் பல வகையிலும் புறக்கணிக்கத் தொடங்கியது, தனி ஈழ உரிமைக்காக தமிழர்கள் போராடக் காரணமாக அமைந்தது.

இன அழிப்பு
ஈழத் தமிழர்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் சிங்கள அரசுகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தன. இதன் உச்சகட்டமாக இலங்கையின் ராஜபட்ச அரசு 2009-ஆம் ஜனவரியில் நிகழ்த்திய விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தமிழ் இன அழிப்பு வேட்டையை நடத்தியது. இப் போரில் இலங்கைக்குத் தேவையான ஆயுதங்கள், ராணுவப் பயிற்சி என அனைத்து உதவிகளையும் இந்திய அரசும் செய்தது. இப் போரில் ஏராளமான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

உரிமை மீறல்கள்
போருக்குப் பின்பும் அங்குள்ள தமிழர்கள், குழந்தைகள் மீதும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த விஷயத்தில் ஐக்கிய நாடுகள் சபை தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டது. மனித உரிமையைப் பாதுகாக்க வேண்டியது சர்வதேச சமுதாயத்தின் கடமை.

வீடியோ காட்சிகள்
இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமைகள் தொடர்பாக "சேனல் 4' வெளியிட்ட விடியோ காட்சிப் பதிவுகள் ஆதாரமாகும். ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை டிவிடி மூலமாகவும், புத்தகம் வாயிலாகவும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களிடமும் கொண்டு செல்லும் முயற்சியை மேற்கொண்டு வருகிறேன்.

பொது வாக்கெடுப்பு
இப் பிரச்னைக்கு தீர்வு காண சர்வதேச சமுதாயத்தின் மேற்பார்வையில் இலங்கையில் ஈழத் தமிழர்கள் வாழும் பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். மேலும், ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து, இனப் படுகொலை குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ராஜபட்ச மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும்வரை எனது இறுதி மூச்சு வரை தொடர்ந்து போராடுவேன் என்றார் வைகோ.

தமிழ் ஆர்வலர்கள்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சேவா இண்டர்நேஷனல் அமைப்பின் நிறுவனர் ரவிகுமார் ஐயர், எச்.ஆர்.டி.ஐ. பொதுச் செயலர் ராஜேஷ் கோக்னா, ஐ.எம். கபாஹி உள்ளிட்டோர் பேசினர். இதில் கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications