சத்தீஸ்கரில் காதலர் தினத்திற்கு ‘நோ’ சொன்ன பாஜக அரசு: பெற்றோர் தினமாக கொண்டாட உத்தரவு
ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் காதலர் தினம் கொண்டாட பாஜக அரசு தடை விதித்துள்ளது. அதற்கு பதிலாக பிப்ரவரி 14ஆம் தேதியை அன்னையர் மற்றும் தந்தையர் தினமாகக் கொண்டாடவும் ஆளும் பா.ஜ.க. அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகமெங்கும் பிப்ரவரி 14ஆம் தேதியை காதலர் தினமாக கொண்டாடி வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிலும் இந்த கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இந்த தினங்களை ஒட்டிய வர்த்தகம் பலகோடியை எட்டுகிறது. காதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவுகள் அரங்கேறுவதாகவும் இந்து அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சாமியார் ஆசாராம் பாபு
கடந்த 2012ஆம் ஆண்டு சத்தீஸ்கரில் நடந்த ராஜிம் கும்பமேளா நிகழ்ச்சியில் பேசிய சாமியார் ஆசாராம் பாபு, காதலர் தினத்தை, அன்னையர் மற்றும் தந்தையர் தினமாகக் கொண்டாட மாநில அரசு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

பாஜக அரசு உத்தரவு
இந்த கோரிக்கையை ஏற்ற ஆளும் பா.ஜ.க. அரசு, பள்ளிகளில் காதலர் தினத்தை அன்னையர் மற்றும் தந்தையர் தினமாகக் கொண்டாட உத்தரவிட்டுள்ளது.

சுற்றறிக்கை
இது குறித்து பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் "இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி அன்று அன்னையர் மற்றும் தந்தையர் தினம் கொண்டாடப்படுவது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இது தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக உத்தரவு ஏதும் அனுப்பப்படாது" என்று கூறப்பட்டுள்ளது.

பெற்றோர்களுக்கு கவுரவம்
இந்த உத்தரவின்படி, 14ஆம் தேதியன்று மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு அதன் நிர்வாகம் அழைப்பு விடுக்கும். அந்த அழைப்பை ஏற்று வரும் பெற்றோர்களுக்கு, அவர்கள் பிள்ளைகள் மாலை அணிவித்து, திலகமிட்டு கவுரவப்படுத்துவார்கள்.












Click it and Unblock the Notifications