பாஜகவில் சலசலப்பு.... அமித்ஷா கூட்டிய எம்.பி.க்கள் கூட்டத்தைப் புறக்கணித்த வருண் காந்தி
டெல்லி: பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர் அமித்ஷா கூட்டிய எம்.பி.க்கள் கூட்டத்தை வருண் காந்தி புறக்கணித்ததால் அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களுடன் பாஜக களமிறங்கியுள்ளது. இத்தேர்தலில் முதல்வர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்பதில் பாஜகவில் குழப்பம் நீடித்து வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கலாம் என்பது பாஜக மேலிடம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் வியூகம். ஆனால் கருத்து கணிப்புகளோ பாஜக எம்.பி. வருண் காந்திக்கே அதிக ஆதரவு இருப்பதாக கூறுகின்றனர்.

வருண் காந்தியை ஒதுக்கும் பாஜக
நேரு குடும்பத்தைச் சேர்ந்த வருண் காந்தியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் பாஜக மேலிடமும் விரும்பவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அலகாபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை முன்னிட்டு வருண் காந்தி ஆதரவாளர்கள் மோடி மற்றும் அவரது படத்தை மட்டும் போட்டு பேனர்களை வைத்திருந்தது.

எம்பிக்கள் கூட்டம்
இது பாஜக தலைவர்களை முகம் சுளிக்க வைத்தது. இதற்காக வருண் காந்தியின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை பாய இருக்கிறது. இந்த நிலையில் உ.பி. தேர்தல் குறித்து ஆலோசிக்க டெல்லியில் அம்மாநில எம்.பி.க்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

வருண் புறக்கணிப்பு
71 எம்.பி.க்களில் 65 பேர் தான் கலந்து கொண்டனர். வருண் காந்தி உட்பட 6 பேர் இந்த கூட்டத்தைப் புறக்கணித்தனர். உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் தமக்கு ஆதரவு இருந்தும் தம்மை முன்னிறுத்த பாஜக மேலிடம் தயங்குவதால் வருண் காந்தி அதிருப்தி அடைந்து இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

மேனகாவும் மல்லுக்கட்டு
வருண் காந்தியின் தாயாரும் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி, அண்மையில் துன்புறுத்தும் விலங்குகளைக் கொல்லலாம் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் பிரதமர் மோடி அவர் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மகனும் பாஜக மேலிடத்துடன் மோதுவது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications