கடவுளின் பரிசு மோடி.. தேசிய சொத்து சுஷ்மா ஸ்வராஜ்... புகழ்ந்து தள்ளும் வெங்கையா நாயுடு
டெல்லி : நாட்டுக்கு கடவுள் அளித்த பரிசு பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தேசிய சொத்து என பா.ஜ இளைஞர் அணி நிகழ்ச்சியில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார்.
டெல்லியில் நேற்று நடந்த பா.ஜ இளைஞர் அணி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு பேசியதாவது..

மோடி அரசின் வெற்றியால் கலக்கம் அடைந்தவர்கள் நாடாளுமன்ற நடவடிக்கைளை தடுக்கின்றனர். நாட்டின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர். அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நாட்டின் மிகச் சிறந்த சொத்து. அவர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. இருந்தும் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கூறுகிறது.
இந்த நாட்டுக்கு கடவுள் அளித்த பரிசு பிரதமர் மோடி. அவரது தலைமையின் கீழ்தான் இந்திய-வங்கதேச ஒப்பந்தம், நாகா அமைதி ஒப்பந்தம் போன்ற சாதனைகள் எல்லாம் செய்யப்பட்டுள்ளது. மோடியால் தான் இந்தியாவின் அணு உலைகளுக்கு யுரேனியம் எரிபொருள் வழங்க ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் முன்வந்துள்ளன.
உறுதி, ஆற்றல், வளர்ச்சி என முப்பரிமாணமுடையவர் மோடி. கடந்த 1916 ம் ஆண்டு குஜராத்தில் இருந்து மகாத்மா காந்தி என்ற சிறந்த நபர் தூய்மை இந்தியாவை பற்றி பேசினார். அதை குஜராத்தில் இருந்து வந்த மற்றொரு நபர் செயல்படுத்தியுள்ளார்.
அவையில் இடையூறு செய்த காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேரை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சஸ்பெண்ட் செய்தது சரிதான். இதுபோன்ற நடவடிக்கைகள் கடந்த 1989 மற்றும் 2013 ம் ஆண்டுகளில் எடுக்கப்பட்டுள்ளது.
அதனால் அவர்கள் போதனைகள் வழங்கக் கூடாது. பல பாவங்களை செய்துவிட்டு, தற்போது புனிதமானவர்களை போல் நடிக்கிறார்கள். ஓட்டலை சுத்தம் செய்தவர் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி என குருதாஸ் காமத் கூறுகிறார். சாதாரண நபர் அமைச்சராக வருவதில் என்ன தவறு? டீ விற்றவர் பிரதமர் ஆனதும், பேப்பர் விற்றவர் ஜனாதிபதி ஆனதும் தான் ஜனநாயகத்தின் அழகு.
இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.












Click it and Unblock the Notifications