வேலூர், மதுரை, தஞ்சை, சேலம்... ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு
டெல்லி: தமிழகத்தின் வேலூர், மதுரை, தஞ்சாவூர் மற்றும் சேலம் ஆகியவை மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் ஸ்மார்ட் சிட்டி எனப்படும் பொலிவுறு நகரங்கள் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சென்னை உட்பட 20 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன.
பின்னர் 2-வது பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தமிழக நகரங்கள் இடம்பெறவில்லை. இதனிடையே டெல்லியில் இன்று 3-வது பட்டியலை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
இதில் தமிழகத்தின் வேலூர், தஞ்சாவூர், மதுரை, சேலம் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 5 நகரங்கள், தமிழகம், கர்நாடகாவில் 4 நகரங்கள், உத்தரப்பிரதேசத்தின் 3, பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தின் தலா 2 நகரங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.