பண ஒழிப்புக்கு முதல் ஆதரவே திரைத்துறையிலிருந்துதான்!- வெங்கய்யா நாயுடு
கோவா: ரூ 500, 1000 நோட்டுகளை ஒழிப்பதாக வெளியான அறிவிப்புக்கு முதல் வரவேற்பு தந்தவர்களே திரைத்துறையினர்தான் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.
கோவாவில் சர்வதேச திரைப்பட விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு உன்னத சேவைக்கான விருதை வழங்கினார்.
பின்னர் விழாவில் பேசிய வெங்கையா நாயுடு, "அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் கருப்புப் பணம் ஒழிக்கப்பட வேண்டும். அமைதியான மற்றும் வளமான எதிர்கால வாழ்க்கைக்கு இது அவசியம்.
பிரதமரின் கருப்புப் பணம் ஒழிப்பு நடவடிக்கைக்கு முதலில் வரவேற்பு அளித்தது திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்தான் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. முறையான வருமான வரி செலுத்துவோர் மட்டுமே நிம்மதியாக உறங்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது," என்றார்.