88 வயதில் 2வது திருமணம் செய்த காங்கிரஸ் தலைவர் என்.டி. திவாரி
லக்னோ: முன்னாள் ஆந்திர மாநில ஆளுநர் என்.டி. திவாரி தனது 88வது வயதில் உஜ்வாலா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
முன்னாள் உத்தர பிரதேச முதல்வரும், முன்னாள் ஆந்திர மாநில ஆளுநருமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த என்.டி. திவாரிக்கு 1954ம் ஆண்டு திருமணமானது. ஆனால் அவருக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் திவாரிக்கும், டாக்டர் உஷ்வாலா ஷர்மா என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டு அதன் மூலம் ரோஹித் சேகர் என்ற மகன் உள்ளார். ஆனால் திவாரி அவரை மகனாக ஏற்கவில்லை.

இந்நிலையில் ரோஹித் சேகர் திவாரி தான் தனது தந்தை என்று கூறி 2008ம் ஆண்டு நீதிமன்றத்தை அணுகினார். வழக்கு தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆன பிறகு திவாரியிடம் வலுக்கட்டாயமாக மரபணு சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவில் திவாரி தான் ரோஹித்தின் தந்தை என்பது உறுதியானது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் பேட்டி அளித்த திவாரி கூறுகையில், ரோஹித்தின் தாய் உஜ்வாலா ஷர்மாவுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை. இது என் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டு என்றார்.
இவ்வளவு பேசிய திவாரி வழக்கு தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு ரோஹித்தை தனது மகனாக ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் அவர் ரோஹித்தின் தாய் உஜ்வாலாவை லக்னோவில் உள்ள தனது வீட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
88வது வயதில் திவாரி இரண்டாவது திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications