டெல்லி நட்சத்திர ஹோட்டல்களில் மாட்டிறைச்சி... தடை செய்ய கோரி இந்துத்துவா அமைப்புகள் போராட்டம்
டெல்லி: டெல்லி நட்சத்திர ஹோட்டல்களில் மாட்டிறைச்சி பரிமாறப்படுவதை ஆளுநர் நஜீப்ஜங் தடை செய்ய வேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. மேலும் டெல்லியில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டல் முன்பாக மாட்டிறைச்சி பரிமாறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா அமைப்புகள் முற்றுகைப் போராட்டமும் நடத்தின.
டெல்லி கேரளா இல்லத்தில் பசு மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாக இந்துசேனா அமைப்பின் தலைவர் விஷ்ணுகுப்தா போலீசில் புகார் கொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து கேரளா இல்லத்தில் டெல்லி போலீசார் சோதனை நடத்தியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கேரளா இல்லத்தில் பசு மாட்டிறைச்சி பரிமாறப்படுவதில்லை; எருமை மாட்டிறைச்சிதான் பரிமாறப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கேரளா இல்ல மெனுவில் இருந்து ஒருநாள் மட்டும் மாட்டிறைச்சி பரிமாறுவது நீக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து மாட்டிறைச்சி பரிமாறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்று டெல்லி நட்சத்திர ஹோட்டல் மெனுக்களில் மாட்டிறைச்சி இடம்பெற்றிருப்பதையும் மாட்டிறைச்சி பரிமாறப்படுவதையும் செய்தியாக ஒளிபரப்பியது. இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய ஹோட்டல்களில் ஒன்றான டெல்லி லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டல் முன்பாக நேற்று இந்துத்துவா அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இதனைத் தொடர்ந்து டெல்லி ஆளுநர் நஜீப் ஜங்குக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், டெல்லி நட்சத்திர ஹோட்டல்களில் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும். இல்லையெனில் எங்களது முற்றுகைப் போராட்டம் நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.