மோடி மீது மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்த தாவூத் கும்பல் சதி: ஜனாதிபதிக்கு வி.ஹெச்.பி. கடிதம்!!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியிருப்பதால் கூடுதல் பாதுகாப்பு அளிக்க கோரி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் தலைவர் அசோக் சிங்கால் கடிதம் அனுப்பியுள்ளார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அசோக் சிங்கால் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை விடுதலைப் புலிகள் இலக்கு வைத்து தற்கொலைப்படை மூலம் தாக்குதல் நடத்தி கொலை செய்ததைப் போல பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் மோடியையும் தீவிரவாதிகள் குறி வைத்துள்ளனர்.
தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இத்தகைய தாக்குதல்கள் நடக்க வாய்ப்பிருப்பதாக கவலைப்படுகிறோம். இதனால் அவருக்கான பாதுகாப்பை அதிகப்படுத்தி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
நாட்டின் உளவுப் பிரிவும் கூட மோடிக்கு இத்தகைய அச்சுறுத்தல் இருப்பதை உறுதி செய்துள்ளது. மோடி மீது துப்பாக்கிச் சூடு ஏதும் நடத்தாமல் தற்கொலைப்படை நடத்தவே தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவு அமைப்பான ஐ.பி.யின் எச்சரிக்கை குறிப்பு தெரிவிக்கிறது.
இந்தியன் முஜாஹிதீன், பாகிஸ்தானின் உளவுத்துறை மற்றும் நிழல் உலக தாதா தாவ்வூத் மற்றும் அவர்களது கூட்டாளிகளே மோடியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். அண்மையில் தாவூத் இப்ராகிமை இந்தியாவுக்கு நாடு கடத்துவேன் என்று மோடி எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து இந்த அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.
இவ்வாறு விஸ்வ ஹிந்து பரிஷத் அந்த கடிதத்தில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications