சிறையில் சசிகலாவுக்கு வசதி செய்ய லஞ்சம் வழங்கப்பட்டதா? புகழேந்திக்கு லஞ்ச ஒழிப்பு துறை சம்மன்
பெங்களூர்: டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கர்நாடக லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கர்நாடக மாநில அதிமுக செயலாளராக இருந்தவர் புகழேந்தி. சசிகலாவின் தீவிர ஆதரவாளரான இவர், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் செய்து தர போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி வரை புகழேந்தி லஞ்சம் அளித்ததாக புகார் எழுந்துள்ளது.
சசிகலா சிறையில் உல்லாச வாழ்க்கை வாழ்வதாக கர்நாடக மாநில சிறைத்துறை டிஐஜியாக இருந்த பெண் அதிகாரி ரூபா வெளியிட்ட பரபரப்பு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறைத்துறை டிஐபி சத்யநாராயணா ரூ.2 கோடி லஞ்சம் வாங்கிக்கொண்டு சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுக்க ஒத்துழைப்பு கொடுத்ததாக ரூபா தெரிவித்தார். ரூபாவுக்கு எதிராக சத்யநாராயணா மான நஷ்ட வழக்கை தொடர்ந்தார்.
இந்த பரபரப்பு குறித்து கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக புகழேந்தி ஜூன் 29ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தயார் என புகழேந்தி தெரிவித்தார்.