விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது.. இந்தியா கோரிக்கையை ஏற்க மறுத்த இங்கிலாந்து
டெல்லி: தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த முடியாது என்று இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துவிட்டது. இதனால் இந்தியாவின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள பல்வேறு வங்கிகளில் ரூ.9400 கோடி கடன் பாக்கி வைத்துள்ள விவகாரம் தொடர்பாக, சமீபத்தில் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கி திரும்ப பெற்றது இந்திய வெளியுறவுத்துறை. மேலும் மல்லையா தற்போது வசிக்கும் இங்கிலாந்தின் அரசு, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்றும் இந்திய அரசு கோரிக்கை விடுத்தது.
இக்கோரிக்கையை இங்கிலாந்து ஏற்க மறுத்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின், 1971ம் ஆண்டு குடியேற்ற சட்டப்படி, அந்த நாட்டில் வசிக்கும் ஒருவரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டால்கூட, அது வெளியேற்றத்திற்கு உரிய குற்றம் கிடையாது என்று இங்கிலாந்து சுட்டிக் காட்டியுள்ளதாம்.
அதேநேரம், குற்றத்தின் தீவிர தன்மையை புரிந்து வைத்துள்ளதாகவும், இந்தியாவுக்கு தேவைப்படும் விசாரணை உதவிகளை அளிக்க சம்மதம் என்றும், விஜய் மல்லையா சரணடைய விரும்பினார் அதற்கு உரிய உதவிகளையும் செய்ய தயார் என்றும், கட்டாயமாக வெளியேற்ற தங்கள் சட்டத்தில் இடமில்லை என்றும் இங்கிலாந்து கூறியுள்ளது.