"புலி சாதம்".. புலியை அடித்து கறிவைத்து சாப்பிட்ட ஆந்திர மக்கள்.. 'பகீர்' சம்பவம்.. என்ன கொடுமை இது?
அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர், யாருக்கும் தெரியாமல் அந்த புலியின் உடலை எடுத்து வந்து அதை வெட்டி சமைத்துள்ளனர். பிறகு, கிராம மக்கள் அனைவருக்கும் புலிக் கறி உணவை அவர்கள் கொடுத்துள்ளனர்.
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் ஒரு கிராம மக்கள் காட்டுப் புலியையே அடித்து கறிவைத்து சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புலிக் கறியை பங்குப்போடுவதில் கிராம மக்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து, இந்த விஷயம் வெளியே தெரியவந்திருக்கிறது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், முதல்கட்டமாக 12 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றம் இழைத்தவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வனத்தை ஒட்டிய கிராமம்
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ளது ஆக்கப்பள்ளி கிராமம். காட்டுப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த கிராமத்தில் அடிக்கடி யானை, காட்டுப்பன்றி, காட்டு மாடு போன்ற வனவிலங்குகள் வந்து விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை நாசமாக்கி விடுவதாக கூறப்படுகிறது. இதனால் வனவிலங்குகளில் இருந்து பயிர்களை காப்பாற்ற அந்த கிராம மக்கள் சட்டத்துக்கு புறம்பாக மின்வேலிகளை அமைத்துள்ளனர்.

சட்டவிரோதமாக மின்வேலி
இந்த மின்வேலிகளில் சிக்கி கடந்த காலங்களில் பல வனவிலங்குகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் வனத்துறையினர் அந்த கிராமத்தில் உள்ள மின் வேலிகளை அகற்றினர். இருந்தபோதிலும், கிராம மக்கள், சாதாரண வேலிக்கு பின்புறம் மின் வேலிகளை அமைத்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மின்வேலிகளை கண்காணிப்பதற்காக வனத்துறையினர் அங்கு கண்காணிப்பு கேமராக்களை வைத்துள்ளனர்.

குறைவான புலிக்கறியால் ஆத்திரம்
இந்த சூழலில், சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு மின் வேலியை கடக்க முயன்ற பெண் புலி ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. இதை பார்த்த அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர், யாருக்கும் தெரியாமல் அந்த புலியின் உடலை எடுத்து வந்து அதை வெட்டி சமைத்துள்ளனர். பிறகு, கிராம மக்கள் அனைவருக்கும் புலிக் கறி உணவை அவர்கள் கொடுத்துள்ளனர். இதில் சிலருக்கு மிகக் குறைவான அளவே புலிக் கறி கிடைத்துள்ளது.

விசாரணை - கைது
இதனால் அதிருப்தியைடைந்த அவர்கள், வனத்துறையினருக்கு இதுகுறித்து தகவல் அளித்தனர். இதன்பேரில், வனத்துறையினர் அங்கு விசாரிக்க வந்த போது, கிராம மக்கள் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து ரகளையில் ஈடுபட்டனர். பின்னர், பெரும் படையுடன் கிராமத்துக்குள் புகுந்த வனத்துறை அதிகாரிகள், சந்தேகத்துக்குரிய 12 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் புலியை சமைத்து உண்டதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.












Click it and Unblock the Notifications