ஐபிஎல் சூதாட்டத்தில் மல்லையாவுக்கு நேரடித் தொடர்பு - ரூ. 200 கோடி சம்பாதித்து விட்டார் .. வின்டு
மும்பை: ஒட்டுமொத்த ஐபிஎல் தொடருமே பிக்ஸ் செய்யப்பட்டுத்தான் நடக்கிறது. இந்த சூதாட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உரிமையாளரான விஜய் மல்லையாவுக்கும் தொடர்பு உள்ளது. அவரும் பெட்டிங்கில் ஈடுபடுகிறார் என்று சூதாட்ட வழக்கில் சிக்கி கைதான நடிகர் வின்டு தாரா சிங் கூறியுள்ளார்.
இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குருநாத் மெய்யப்பனுடன் இணைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைதானவர் என்பது நினைவிருக்கலாம்.
2013ல் நடந்த ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் வழக்கில் வின்டுவும் ஒரு முக்கிய்ப புள்ளி ஆவார். இவர் தற்போது மேலும் பல பரபப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார். ஜி நியூஸ் டிவி நடத்திய ஸ்டிங் நடவடிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார் வின்டு.
அதிலிருந்து சில பகுதிகள்...
நிஜமான சண்டையே வேறங்க
உண்மையில் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசனுக்கும், முன்னாள் ஐபிஎல் கமிஷனர் லலித் மோடிக்கும் இடையிலான சண்டைதான் இந்த ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உண்மையான காரணம், பின்னணி ஆகும்.
இவர்கள் சண்டையால்தான் இத்தனை பஞ்சாயத்தும்
இவர்களுக்கு இடையே நடந்து வரும் பணிப் போரினால்தான் சூதாட்ட விவகாரமே வெடித்து வெளி வந்தது.
சீனியைக் கவிழ்க்க மோடிக்கு கிடைத்த சான்ஸ்
சீனிவாசனை காலி செய்ய தனக்குக் கிடைத்த வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொண்டார் லலித் மோடி.
ஆமா நான் தப்பு செய்தேன்தான்...
நான் பெட்டிங்கில் ஈடுபட்டது உண்மைதான். ஆனால் சீனிவாசனுக்கு எதிராக என்னை தூண்டில் மீனாக பயன்படுத்தியுள்ளனர்.
பவார்தான் என்னை சிறையில் அடைக்க காரணம்
நான் போலீஸாரால் கைது செய்யப்பட்டபோது அவர்கள் என்னிடம் கூறுகையில், சரத் பவாரிடமிருந்து எங்களுக்கு நெருக்கடி உள்ளது. நீங்கள் தப்பு செய்யவில்லை என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் சீனிவாசன் சிக்கும் வரை உங்களை விடக் கூடாது என்று பவார் நெருக்குகிறார். எனவே 10 நாட்களோ அல்லது ஒரு மாதமோ நீங்கள் எங்களிடம் இருந்துதான் ஆக வேண்டும் என்று கூறினர்.
பெரும் நஷ்டத்தை சந்தித்தார் மெய்யப்பன்
பெட்டிங்கில் பெரும் நஷ்டத்தையே சந்தித்தார் குருநாத் மெய்யப்பன். அவருக்கு சிக்கல் வந்தால் அது சீனிவாசனையே பாதிக்கும் என்பதால்தான் என்னை வைத்து சீனிவாசனை மடக்க தீவிரம் காட்டினர்.
முழுக்க முழுக்க பிக்ஸிங் தொடர்
உண்மையைச் சொல்லட்டுமா.. ஒட்டுமொத்த ஐபிஎல் தொடருமே பிக்ஸ் செய்துதான் நடத்தப்படுகிறது. இதில் நேரடியாக ஒரு அணியின் உரிமையாளரே ஈடுபட்டுள்ளார். அவர் வேறு யாருமல்ல, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விஜய் மல்லையாதான்.
அவரைத் தவிர வேறு யாருக்குமே தொடர்பில்லை
மல்லையா மட்டுமே இதில் நேரடியாக ஈடுபட்டுள்ளார். மற்ற யாருக்குமே இந்த சூதாட்டம், பெட்டிங் குறித்துத் தெரியாது. மல்லையா இதில் நேரடியாகவே ஈடுபட்டுள்ளார்.
ரூ. 200 கோடி வரை லாபம் பார்த்த மல்லையா
சூதாட்டம் மூலம் ரூ. 100 கோடி முதல் ரூ. 200 கோடி வரை சம்பாதித்து விட்டார் மல்லையா. இது யாருக்குமே தெரியாது.
எல்லாத்துக்கும் காரணம் மோடிதான்
உண்மையில் இந்த பெட்டிங் தலைவிரித்தாட முக்கியக் காரணமே லலித் மோடிதான். பவார் கண்காணிப்பில் அவர்தான் ஐபிஎல்லைத் தொடங்கினார். அவர்தான் தென் ஆப்பிரிக்காவுக்கு முதல் முறையாக இப்போட்டியைக் கொண்டு சென்றார். பவார் ஆதரவுடன், சசி தரூரை வைத்து பல வேலைகளைச் செய்தார் மோடி. அதுதான் பெட்டிங் தலைவிரித்தாட முக்கிய அடிப்படையாக அமைந்தது.