வேலைக்கு போகாததைத் தட்டிக்கேட்ட மனைவி, குழந்தைகளுக்கு கத்திக்குத்து... கணவரும் தற்கொலை முயற்சி
மும்பை: வேலைக்கு போகாமல் ஊர் சுற்றியதை தட்டிக் கேட்டதால் மனைவி மீது ஆத்திரம் கொண்ட கணவர், அவரையும், இரண்டு குழந்தைகளையும் கத்தியால் குத்தி, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மும்பை கிழக்கு விரார் பகுதியில் உள்ள மான்வேல்படா பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா கதம் (40). இவரது மனைவி கல்பிதா நர்சாக பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதிக்கு சாய் (10), அதர்வா (7) என இரண்டு குழந்தைகள்.

சமீபகாலமாக வேலைக்கு செல்லாமல் கதம் ஊர் சுற்றி வந்துள்ளார். கல்பிதாவின் வருமானத்திலேயே குடும்ப செலவுகள் பார்த்து வந்துள்ளனர். இது தொடர்பாக அடிக்கடி கணவர், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த வெள்ளியன்று கணவருக்கும், மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபத்தில் சமையலறையில் இருந்த கத்தியால் கல்பிதாவைக் குத்தியுள்ளார் கதம். இதனை தடுக்க முயன்ற போது, தனது இரண்டு குழந்தைகளையும் அவர் கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் தானும் கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தார், 4 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி கல்பிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இரண்டு குழந்தைகளும் தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்ட போதும், கதமின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கதம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications