நீர் மின் நிலைய திட்ட ஊழல்: ஹிமாச்சல் முதல்வர் வீரபத்ரசிங் பதவி காலியாகுமா?
டெல்லி: தம் மீதான நீர்மின் நிலைய திட்ட ஒப்பந்தம் தொடர்பான ஊழல், பல கோடி ரூபாய் தனியார் நிறுவன பங்குகளை வைத்திருப்பது போன்ற புகார்களை ஹிமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ரசிங் நிராகரித்துள்ளார்.
கடந்த 2003-2007-ஆம் ஆண்டு ஹிமாசாலப் பிரதேச முதல்வராக வீரபத்ர சிங் இருந்த போது, நீர் மின் நிலைய திட்டத்துக்கான ஒப்பந்தத்தை நீட்டிக்க, தனியார் நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கியதாக ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி அண்மையில் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக பாஜக இளைஞரணித் தலைவர் அனுராக் தாகூர் தலைமையிலான பாஜக தலைவர்கள் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத்தை நேற்று சந்தித்து புகார் மனு அளித்தனர்.
தனியார் நிறுவனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பங்குகள் வைத்திருந்த விவரத்தை 2012-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது வீரபத்ர சிங் மறைத்துள்ளார். இதேபோல், அவரது மனைவி பிரதீபா சிங், கடந்த ஆண்டு மண்டி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்புமனுவில் இத் தகவலை மறைத்துள்ளார்.
இதன் மூலம் தேர்தல் நடத்தை விதிகளை வீரபத்ர சிங்கும், அவரது மனைவி பிரதீபா சிங்கும் மீறியிருப்பதால், இருவரது வெற்றியையும் செல்லாது எனத் தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில் தம் மீதான அனைத்து புகார்களையும் வீரபத்ரசிங் நிராகரித்திருக்கிறார். அத்துடன் தமது நிலையை கட்சி மேலிடத்திடம் விளக்குவதற்காக நேற்று டெல்லி விரைந்தார் வீரபத்ரசிங். டெல்லியில் ஹிமாச்சல் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அம்பிகா சோனியை வீரபத்ரசிங் சந்தித்து தம் மீதான புகார் பற்றி விவரித்தார்.
இருப்பினும் பாரதிய ஜனதா கட்சியோ வீரபரத்ர சிங் ராஜினமா செய்தாக வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications