அரை நிர்வாணத்தில் கைகள் கட்டப்பட்டு சாலையில் கிடந்த அரசு மருத்துவர்.. போலீஸார் தாக்கியதாக புகார்
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான உபகரணங்கள் இல்லை என குற்றம்சாட்டிய அரசு மருத்துவர் அரை நிர்வாண கோலத்தில் கைகள் கட்டப்பட்டு சாலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது நரசிப்பட்டினம் அரசு மருத்துவமனை. இங்கு மருத்துவராக சுதாகர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தான் பணியாற்றும் மருத்துவமனையில் கொரோனா நோய் தடுப்பிற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லை என்று அவர் மார்ச் மாதம் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் என் 95 மாஸ்க்களும் கொடுப்பதில்லை, ஒரே மாஸ்க்கை 15 நாட்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

சுகாதாரத் துறை
இதையடுத்து அவரை கடந்த மாதம் 8ஆம் தேதி ஆந்திர மாநில சுகாதாரத் துறை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர் என்ன ஆனார் என தெரியவில்லை. இந்த நிலையில் அவர் நேற்று மாலை நரசிப்பட்டினம் அருகே ஒரு இடத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் லாரியின் முன்பு இருந்தார்.

கான்ஸ்டபிள்
அங்கு சென்ற போலீஸார் அவரை மீட்டு நரசிப்பட்டினம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பணி இடைநீக்கம் செய்யப்பட்ட மருத்துவர் சுதாகரை போலீஸ் கான்ஸ்டபிள் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அந்த கான்ஸ்டபிள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

போலீஸார்
இதுகுறித்து காவல் துறை ஆணையர் மீனா கூறுகையில் அக்கயாபாளையம் அருகே யாரோ ஒரு நபர் சாலையில் இடையூறு செய்வதாக காவல் துறை கட்டுப்பாட்டுக்கு தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து அங்கு போய் பார்த்தபோது அவர் டாக்டர் சுதாகர் என தெரியவந்தது. இதையடுத்து அவர் கட்டுப்படுத்த போலீஸார் முயன்றனர்.

நடவடிக்கை
அப்போது அவர் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதுடன் போலீஸ் கான்ஸ்டபிளின் செல்போனை பிடுங்கி எறிந்தார். மருத்துவருக்கு மன ரீதியிலான பிரச்சினைகள் இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளோம். அவர் போதையில் இருந்தாரா என்பது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த முடிவுகள் வந்தவுடன் அவர் மீது நடவடிக்கை எடுப்பதா வேண்டாமா என்பது தெரியவரும் என்றார்.












Click it and Unblock the Notifications