சபரிமலையில் நாளை புதுவருடத்தை வரவேற்கும் “விஷு கனி காணல்” பூஜை
திருவனந்தபுரம்: கேரளாவில் அமைந்துள்ளசபரிமலை சுவாமி ஐய்யப்பன் கோவிலில் சித்திரை மாத பிறப்பையொட்டி கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐய்யப்பனுக்கு விஷேச பூஜைகள் நடைபெற்று வருகிறது.
சித்திரை மாத பிறப்பான நாளை சபரி மலையில் சித்திரை விஷு கனிகாணுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையட்டி இன்று இரவு 10.50 மணிக்கு அத்தாள பூஜை முடிவடைந்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும்.
சுவாமி ஐய்யப்பன் விக்ரகம் முன்பு கனி வகைகள், காய்கறிகள், புத்தாடைகள், தங்கம், வெள்ளி மற்றும் ரூபாய் நோட்டுக்கட்டுகள் படைக்கப்படும்.
சில்லறை நாணய படையல்:
மேலும் ஒரு பெரிய வெள்ளி பாத்திரத்தில் சில்லரை நாணயங்கள் படைக்கப்பட்டு இருக்கும். நாளை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.
விஷூ கனிகாணல்:
அதை தொடர்ந்து சுவாமி ஐய்யப்பனுக்கு விஷேச பூஜைகள் நடத்தப்பட்டு சித்திரை விஷு கனிகாணுதல் நடைபெறும். அப்போது பக்தர்களுக்கு சில்லரை காசுகளை கைநீட்டமாக தந்திரி, மேல்சாந்தி மற்றும் கோவில் ஊழியர்கள் வழங்குவார்கள்.
செல்வம் பெருகும்:
இந்த காசுகளை பக்தர்கள் தங்கள் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். சித்திரை விஷுவையட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள்:
அவர்கள் இன்றே ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து தங்க தொடங்கி விட்டனர். நாளை பக்தர்கள் கூட்டம் இதைவிட அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.