மகப்பேறு விடுப்புக்கு குட்பை.. ஒரு மாதக் குழந்தையுடன் பணிக்குத் திரும்பிய அரசு அதிகாரிக்கு சல்யூட்
விசாகப்பட்டினம்: கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் 6 மாத மகப்பேறு விடுமுறையை ரத்து செய்துவிட்டு ஒரு மாதக் கைக்குழந்தையுடன் கடமையே கண் என நினைத்து பணிக்கு திரும்பியுள்ளார் விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீஜனா கும்மல்லா. இவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,152 ஆக உள்ளது. அது போல் பலியானோரின் எண்ணிக்கை 308 ஆக உயர்ந்துவிட்டது. இந்த நிலையில் ஆந்திர பிரதேத்தை பொருத்தமட்டில் இங்கு கொரோனாவால் 427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
7 பேர் பலியாகிவிட்டனர். இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில் ஆந்திரத்தில் விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீஜனா கும்மல்லா. இவர் கடந்த மாதத்திற்கு முன்னரிலிருந்து குழந்தை பேறுக்கான விடுமுறையில் இருந்தார். பொதுவாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு 6 மாதங்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுவது விதி.

பணிக்கு திரும்பிய அதிகாரி
அந்த வகையில் கடந்த மாதத்துக்கு முன்னர் மகப்பேறு விடுமுறையில் விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீஜனா கும்மல்லா சென்றிருந்தார். அவருக்கு குழந்தை பிறந்தது. இந்த நிலையில் ஒரு மாத காலம் முடிந்த நிலையில் அவர் மீதமிருந்த 5 மாத விடுமுறையை ரத்து செய்துவிட்டு இன்று முதல் பணிக்கு திரும்பினார்.

அமைச்சர் பதிவு
அதுவும் பிறந்து ஒரு மாதமே ஆன கைக்குழந்தையுடன் அவர் பணியாற்றியதை கண்டு ஏராளமானோர் பாராட்டினர். மகப்பேறு விடுமுறையின் போது அரசு நிர்ணயித்த கால அளவை விட சம்பளம் பிடித்தாலும் பரவாயில்லை என விடுமுறையை பெரும்பாலானோர் நீட்டிப்பார்கள். ஆனால் குழந்தை வளர்ப்பை போல் மக்கள் பணியும் முக்கியம் என ஸ்ரீஜனா கருதியதை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
|
அதிர்ஷ்டம்
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இது போல் கொரோனா போராளிகளை அடைய இந்தியா அதிர்ஷ்டம் செய்துள்ளது. விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையர் தனது ஒரு மாத குழந்தையுடன் பணிக்குத் திரும்பியுள்ளார். இந்த நெருக்கடி அவரை பணி செய்ய அழைத்துள்ளது. கடமைதான் முக்கியம் என கருதும் இவருக்கு எனது மனமார்ந்த நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

ஓரணியில்
இதுகுறித்து ஸ்ரீஜனா கூறுகையில் மனிதாபிமானமுள்ளவராக மாவட்ட நிர்வாகத்திற்கு என்னால் இயன்ற உதவியை செய்வது என்பது எனது கடமை. இந்த நேரத்தில் அனைவரும் கொரோனாவை எதிர்த்து ஓரணியாக நிற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications