காஷ்மீர்: தேர்தலில் ஓட்டு போட்டவரை அரை நிர்வாணமாக்கி அடித்த பிரிவினைவாதிகள்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா தொகுதியில் வாக்களிப்பை புறக்கணிக்க கோரியதை ஏற்காமல் ஓட்டுப்போட்டவர் அடித்து அரை நிர்வாணமாக்கப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரின் 6 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு பல கட்டங்களாக தேர்ந்தல் நடத்தப்படுகிறது. இந்திய நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று அங்குள்ள பிரிவினைவாதிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் குப்வாரா மற்றும் பாராமுல்லா ஆகிய தொகுதிகளில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது. இதில் எதிர்ப்புகளை மீறி பாரமுல்லாவில் 60 விழுக்காடு வாக்குப்பதிவானது. இதனால் விரக்தியடைந்த பிரிவினைவாதிகள் வாக்களிக்க சென்றவர்களை தேடிச் சென்று அடித்து உதைத்து வருகிறார்கள்.
நடுத்தர வயதுள்ள ஒரு ஆணை ஒரு கோஷ்டியினர் அடித்து இழுத்து வந்து தெருவில் நிறுத்தினர். பிறகு ஒரு இளைஞர் கூட்டம் அவரது சட்டையை கிழித்தெறிந்து அரை நிர்வாணமாக்கி கோஷமிட்டது. இதேபோல வாக்களிக்க சென்ற சிலரது வீடுகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.