வியாபம் முறைகேடு... ஆளுநர் மகன் மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை
போபால்: நாட்டை உலுக்கும் வியாபம் ஊழல் முறைகேட்டில் தொடர்புடைய மத்திய பிரதேசத்தின் ஆளுநர் ராம் நரேஷ் யாதவின் மகன் சைலேஷ் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பொறியியல், மருத்துவம், நிர்வாக படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்த கடந்த 1982-ம் ஆண்டு வியாபம் எனும் தேர்வு வாரியம் தொடங்கப்பட்டது. பிறகு இந்த தேர்வு வாரியம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் என பல்வேறு துறைகளுக்கும் பணியாளர்களை தேர்வு செய்யும் அமைப்பாகவும் மாறியது.

வியாபம் நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதாக கடந்த 2007-ம் ஆண்டு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அப்போது இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு வியாபம் முறைகேடு பூதாகரமாக வெடித்தது. அப்போதுதான் மத்தியப் பிரதேச அரசு தேர்வு வாரியத்தில் சுமார் ரூ20 ஆயிரம் கோடிக்கு மேல் லஞ்சம் வாங்கிக் கொண்டு முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமானது.
இதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த சிறப்புக்குழு 2007-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை மத்திய பிரதேசத்தில் நடந்த 167 தேர்வுகளை ஆய்வு செய்தது.
இதில் ஆளுநர் தொடங்கி கடை நிலை ஊழியர் வரை பல ஆயிரம் பேருக்கு இந்த முறைகேடுகளில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மத்திய பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் யாதவும் பணம் பெற்றுக் கொண்டு, பரிந்துரை கடிதம் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் 2 ஆயிரம் பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 700 பேர் தலைமறைவாகிவிட்டனர். அதேநேரத்தில் இந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் மரணம் அடைந்ததால் பிரச்சனை வெடித்தது. இதுவரை 50 பேர் மர்மான முறையில் உயிரிழந்தனர்.
தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. முதல் கட்டமாக ஆளுநரின் மகன் சைலேஷ் மர்மமான முறையில் உயிரிழந்தது எப்படி என்பது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முதல் விசாரணையை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications