“கோல்டு மெடல் வாங்க நினைச்சா”.. டைரியில் கடைசி குறிப்பு.. கொல்கத்தா பெண் டாக்டரின் தந்தை கண்ணீர்!
கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், தனது மகளின் லட்சியம் மருத்துவ மேற்படிப்பில் கோல்டு மெடல் வாங்க வேண்டும் என்பதுதான் என்றும் தனது டைரியில் கடைசியாக அதனை எழுதி வைத்துள்ளார் என்றும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவத்தில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் மரணத்திற்கு நீதி கேட்டு மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இறந்த பெண் மருத்துவரின் உடலில் 150 மி.கி விந்தணு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், இந்தக் குற்றச் செயலில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கலாம் என மருத்துவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த கொலை வழக்கு விசாரணையை கொல்கத்தா உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் 5 மருத்துவர்களுக்கு விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக பேசிய கொல்கத்தா பெண் மருத்துவரின் தந்தை, தனது மகள் படிப்பில் கெட்டிக்காரர் என்றும், ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் படிப்பார் என்றும் தெரிவித்துள்ளார். "அவள் நாள் முழுவதும் புத்தகங்களில் தான் மூழ்கி இருப்பாள். அவள் மிகவும் கடினமாக உழைத்தாள். தனது பர்சனல் டைரியில் இறுதிப் பதிவாக தனது எம்.டி மேற்படிப்பில் தங்கப் பதக்கம் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இப்போது அனைத்தும் சிதைந்துவிட்டன." என்று அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
"டாக்டராக வேண்டும் என்ற இலக்கை அடைய அவர் நிறைய போராடினாள். அவளது லட்சியமான மருத்துவர் ஆக வேண்டும் என்ற இலக்கை எட்ட நாங்கள் பல தியாகங்கள் செய்தோம். எனது மகளை நான் திரும்பப் பெறமாட்டேன். ஆனால் என்னால் செய்ய முடிந்ததெல்லாம் தைரியமாகவும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். நாடு முழுவதிலுமிருந்து வரும் ஆதரவு எங்களுக்கு நீதிக்காக போராடுவதற்கு நிறைய தைரியத்தை அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
பெண் மருத்துவர் கொலை வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது குறித்துப் பேசிய அவர், எனது மகளை எதுவும் எனக்குத் திரும்பக் கொண்டு வராது. ஆனால் நாங்கள் இப்போது நீதியை நம்புகிறோம். நாங்கள் நம்பிக்கையை இழக்கக்கூடாது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். எனது மகளை இவ்வளவு கொடூரமான முறையில் கொன்றதற்கான விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
"குற்றவாளிகள் எவ்வளவு சீக்கிரம் தண்டிக்கப்படுகிறார்களோ, அவ்வளவு நல்லது. எங்களுக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும், இருப்பினும் எங்கள் இழப்பை எதுவும் ஈடுசெய்ய முடியாது. கல்லூரி நிர்வாகம் எனது மகளுக்கு ஆதரவாக இல்லை" என்றும் ஆதங்கத்தோடு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications