மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா -ஆட்டம் காணும் மம்தா அமைச்சரவை
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மேலும் ஒரு அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்து மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநில வனத்துறை அமைச்சராக இருந்த ரஜிப் பானர்ஜி இன்று தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2018-ம் ஆண்டே அமைச்சரவையில் இருந்து விலகும் முடிவை தாம் எடுத்ததாகவும் ஆனால் அந்த முடிவை மம்தா ஏற்கவில்லை எனவும் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
2018-ம் ஆண்டு நுண் நீர் பாசனத்துறையை தன்னிடம் இருந்து பறிப்பதற்கு முன்னர் அது தொடர்பாக மம்தா தன்னிடம் ஆலோசனை நடத்தாதது தன்னை வேதனைப்படுத்தியதாக கூறியுள்ளார். இதனிடையே 2018-ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு நிகழ்வுக்கு மூன்று ஆண்டுகள் கழித்து பதவியை ராஜினாமா செய்வதாக கூறும் ரஜீப் பானர்ஜியின் கருத்து ஏற்கத்தக்க தல்ல என திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்காக பிரசாந்த் கிஷோருடன் மம்தா ஒப்பந்தம் செய்திருப்பது திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் வெளிப்பாடாக அக்கட்சியில் இருந்து அண்மைக்காலமாக முக்கியப் பிரமுகர்கள் சிலர் வெளியேறிவிட்டார்கள், சிலர் கட்சிக்குள் இருந்துக்கொண்டே மம்தாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்கள்.
பிரசாந்த் கிஷோரின் ஆதிக்கம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் அதிகரித்ததன் எதிரொலியாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகியாக திகழ்ந்த சுவேந்து அதிகாரி எம்.எல்.ஏ. பதவி உட்பட அனைத்து பொறுப்புகளையும் தூக்கியெறிந்துவிட்டு பாஜகவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
இதனிடையே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரஜிப் பானர்ஜியின் நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றியுள்ள திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பார்த்தா பானர்ஜி, '' திரிணாமுல் காங்கிரஸ் கட்சி என்பது ஒரு கடல் போன்றது, அதில் ஒரு குவளை நீர் வெளியேறுகிறது என்பதற்காக யாருக்கும் கவலையில்லை'' எனக் கூறியிருக்கிறார்.