குடிக்கு அடிமையாகாதீர்கள்... குடும்பத்திற்கு அடிமை ஆகுங்கள்... தத்தெடுத்த கிராமத்தில் சச்சின் பேச்சு
ஹைதராபாத்: குடிப் பழக்கத்துக்கு அடிமை ஆகாமல், சொந்த குடும்பத்திற்கு அடிமையாகுங்கள் என தான் தத்து எடுத்துள்ள கிராமத்தில் உள்ள மக்கள் மத்தியில் சச்சின் டெண்டுல்கர் பேசினார்.
பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிரபல கிரிக்கெட் வீரரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சச்சினுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதமர் அனுமதியோடு ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கூடூர் மண்டலத்தில் உள்ள புத்தம் ராஜுகண்டிகை கிராமத்தை தத்து எடுத்துள்ளார் சச்சின்.
அக்கிராமத்தில் தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தும், சொந்த பணத்தில் இருந்தும் பல்வேறு வளர்ச்சி பணிகளை சச்சின் தொடங்கியுள்ளார்.

வளர்ச்சிப் பணிகள்...
இதன்படி, அங்கு வாழும் மக்களுக்கு குடிசை வீடுகளுக்கு பதில் காங்கிரீட் வீடுகளை கட்டித் தர திட்டமிட்டுள்ள சச்சின், அக்கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி போன்றவற்றையும் ஏற்படுத்தித் தர திட்டமிட்டுள்ளார்.

மாணவர்களுக்கு...
அதேபோல், அக்கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு வகுப்பறை கட்டிடம் குப்பைகளை உரமாக்கும் மையம், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவற்றையும் செய்து தர உள்ளார்.

நேரில் ஆய்வு...
அம்மாவட்ட ஆட்சியாளர் மேற்பார்வையில் அக்கிராமத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடங்கப் பட்டுள்ளது. இந்நிலையில், இன்று வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிட புத்தம் ராஜூ கண்டிகை கிராமத்திற்கு நேரில் சென்றார் சச்சின்.

விழாக்கோலம்...
சச்சின் வருகையை ஒட்டி அக்கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. சச்சினுக்கு அக்கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அடையாள அட்டை கொடுக்கப்பட்டவர்கள் மட்டுமே சச்சினை நெருங்க அனுமதி அளிக்கப்பட்டது.

அடிக்கல் நாட்டினார்...
கிராமத்தில் புதிய குடிநீர் குழாய் திட்டத்துக்கும், கிரிக்கெட் மைதானம், வர்த்தக கூடம், உரமேலாண்மை கூடம் ஆகியவற்றுக்கும் சச்சின் அடிக்கல் நாட்டினார்.

நன்றி...
அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் மத்தியில் பேசினார் சச்சின். அப்போது அவர் கூறுகையில், "நீங்கள் எனக்கு தந்த ஆதரவுக்கு, இந்த நிகழ்வில் கலந்துகொண்டு எனது வழியில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

அன்பிற்கு அடிமையாகுங்கள்...
குடிக்கு அடிமையாகாதீர்கள்-குடும்பத்துக்கு அடிமையாகுங்கள், நாம் கட்டும் சமூக மையத்திற்கு உங்கள் குடும்பத்தாருடன் வந்து நேரத்தை செலவிடுங்கள்" என்று கூறினார்.

கிரிக்கெட்...
பின்னர், தேர்வு செய்யப்பட்டு இருந்த 30 மாணவர்களுடன் சச்சின் சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடினார்.












Click it and Unblock the Notifications