சொத்துக்காக சொந்த சீடர்களால் கொல்லப்பட்டாரா ஓஷோ? 26 வருடத்திற்கு பிறகு துரத்தும் வழக்கு
மும்பை: தத்துவ ஞானி ஓஷோ சொத்துக்காக கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் கிளம்பியுள்ளது. ஓஷோவின் சீடர் ஒருவர் தொடர்ந்துள்ள வழக்கால் இந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த ஓஷோ எனும் ரஜ்னீஷ், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெரும் சீடர்களை பெற்றார். இவரது தத்துவங்கள் மனிதர்களை குழப்பி அதன்பிறகு உண்மையை கண்டறிய வழிகாட்டுபவை என்பதால் ஓஷோ மீது ஈர்ப்பு அதிகரித்தது.

ஐரோப்பா, அமெரிக்காவில் ஓஷோ மாற்று மதத்தை பரப்புவதாக அங்குள்ள மத குழுக்கள் கடும் ஆத்திரம் அடைந்தன. இந்நிலையில், அமெரிக்காவில் ஒரேகான் பகுதியில் ரஜ்னீஷ்புரம் என்ற ஆன்மிக நகரத்தை ஓஷோவின் சீடர்கள் உருவாக்கினார்கள்.
அவரை விட்டுவைக்க கூடாது என கருதிய அமெரிக்கா, புரட்சிகரமான கருத்துகளைப் பரப்பியதாகக் கூறி, அவரைக் கைது செய்தது. எந்த நாடு புரட்சி, நாகரீகம் என பேசுகிறதோ அதே நாடு, புரட்சி பேசுவதாக கூறி ஆன்மீகவாதி ஓஷோவை கைது செய்ததுதான் இதில் கவனிக்க வேண்டியது.
அமெரிக்கச் சிறையில் இருந்து விடுதலையான ஓஷோவுக்கு பல நாடுகளும் தடை விதித்தன. எனவே, கடைசியாக புனே ஆசிரமத்துக்குத் திரும்பினார். பூனே ஆசிரமத்தில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்த ஓஷோ, 1990ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி மரணமடைந்தார்.
சிறையில் இருந்தபோது, உணவில் அவருக்கு கொஞ்சம், கொஞ்சமாக கொல்லும் 'ஸ்லோ பாய்ஷன்' கொடுக்கப்பட்டாதாக அமெரிக்கா மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த ஸ்லோ பாய்ஷன்தான் ஓஷோவின் உயிரைப் பறித்தது என அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில், ஓஷோவின் நெருக்கமான ஜான், ஜெயேஷ் என்ற இரு சீடர்கள், ஓஷோவின் சொத்துக்களுக்கு ஆசைப்பட்டு அவரைக் கொன்றதாக யோகேஷ் தாக்கர் என்ற மற்றோரு சீடர் 26 வருடங்கள் கழித்து இப்போது குற்றச்சாட்டை வைத்துள்ளார். ஓஷோவின் மர்ம மரணம் பற்றி விசாரிக்க வேண்டும் என்று யோகேஷ் தாக்கர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். ஓஷோவின் மரணச் சான்றிதழை வழங்கிய டாக்டர் கோகனியின் பிரமாண பத்திரத்தையும் இணைத்துத் தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த பிரமாண பத்திரத்தில் டாக்டர் கோகனி கூறியிருப்பது: '1990 ஜனவரி 19-ம் தேதி மதியம், பூனே ஓஷோ ஆசிரமத்தில் இருந்து எனக்கு போன் வந்தது. 'உடனே ஆசிரமத்துக்கு வாருங்கள்' என போனில் பேசியவர் என்னிடம் கூறினார். உடனே நான், ஆசிரமத்துக்குச் சென்றபோது ஓஷோவின் சீடர்கள் ஜான் அன்டிவ் மற்றும் ஜெயேஷ் ஓஷோ அருகில் அமர்ந்திருந்தனர்.
'ஓஷோ உடலைவிட்டுச் சென்றுக்கொண்டிருக்கிறார்' என்று ஜான் கூறினார். நான் ஓஷோவின் உடலைத் தொட்டுப் பார்த்தபோது, உடல் வெதுவெதுப்பாக இருந்தது. ஆனால் ஜானோ, 'ஓஷோ இறக்கப்போகிறார். சீக்கிரம் மரணச் சான்றிதழை எழுதுங்கள்' எனக் கூறி என்னை அவரசப்படுத்தினார்.
போஸ்ட்மார்டத்தைத் தவிர்க்க, 'இதயம் தொடர்பான காரணத்தால் ஓஷோ இறந்தார்' என என்னை அறிக்கை தரச் சொன்னார்கள். ஜானும், ஜெயேஷும் ஏன் ஓஷோ இறப்பதற்காகக் காத்திருந்தர்கள் எனத் தெரியவில்லை.
அவர்களுக்கு அக்கறை இருந்திருந்தால், ஆசிரமத்தில் இருக்கும் மருத்துவர்களை அழைத்திருக்கலாம். ஆனால், அவர்கள் என்னை அழைத்தது மரணச் சான்றிதழை வாங்கவே அவர்கள் முற்பட்டனர். இவ்வாறு டாக்டர் கோகனி கூறியுள்ளார்.
ஓஷோ இறந்த ஒரு மணி நேரத்தில் அவரது உடலைத் தகனம் செய்ய வேண்டும்' என ஜானும், ஜெயேஷும் அவசர அவசரமாக வேலையில் இறங்கியுள்ளனர்.
ஓஷோவின் பூனே ஆசிரமத்தின் மதிப்பு ரூ.1,000 கோடி இருக்கும். இந்த ஆசிரமம் மூலம் ஜானுக்கும், ஜெயேஷுக்கும் வருடத்துக்கு ரூ.100 கோடி வருமானம் வருகிறது. ஜானும், ஜெயேஷும் சேர்ந்து வெளிநாடுகளில் 20 நிறுவனங்களைத் தொடக்கி, ஓஷோவின் ரூ.800 கோடி சொத்துக்களை அபகரித்துள்ளனர். இவ்வாறு யோகேஷ் தாக்கர் கூறியுள்ளார்.
யோகேஷ் தாக்கர் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட மும்பை உயர் நீதிமன்றம், வெளிநாட்டில் ஒருக்கும் ஓஷோவின் உயிலை இந்தியாவுக்குக் கொண்டுவந்து சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
மரணத்தை கொண்டாட்டமாக பார்க்க சொன்ன, ஓஷோவின் மரண விவகாரம் இப்போது திண்டாட்டமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications