exclusive: முதலில் முண்டக்கை..அடுத்துதான் சூரல் மலை.. அழுது கொண்டே விவரித்த அலவி.. அதிர்ந்த ராணுவம்
வயநாடு: வயநாட்டில் உள்ள முண்டக்கை தேவாலயத்தை சுற்றிலும் நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்களை மீட்பதற்கு அலவி என்ற நபர் ராணுவத்திற்கு உதவி செய்து வருகிறார். அவர் ஜேசிபிக்களை ஒவ்வொரு அங்குலமாக தேட வைத்து உதவி வருகிறார். பலரையும் பறிகொடுத்த போதும், மனதை கல்லாக்கிக் கொண்டு, அங்குள்ள தகவல்களை ராணுவத்திற்கு தெரிவித்து வருகிறார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 29 ம் தேதி இரவில் கனமழை பெய்தது. 30 ம் தேதி அதிகாலை 2 மணியளவில் முண்டக்கை என்ற மலைக் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்து சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டது.

அத்துடன் காட்டாற்று வெள்ளமும் கரைபுரண்டு ஓடியதால், அதில் வீடுகள், வாகனங்கள், சாலைகள், பாலங்கள் என கிராமங்களில் இருந்த அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. அங்கு வசித்து வந்த மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், மண்ணுக்குள் புதைந்தும் உயிருக்கு போராடினார்கள். இதை அறிந்ததும் போலீசார், தீயணைப்பு துறையினர் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் ராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் இணைந்து கடந்த 4 நாட்களாக மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை மற்றும் சூரல் மலை ஆகிய மலைக் கிராமங்களை இணைக்கும் முக்கிய பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு வாகனங்கள் சென்று வரும் வகையில் இரும்பு கம்பிகள் கொண்டு தற்காலிக பாலம் அமைக்கும் பணியில் ராணுவ பொறியியல் பிரிவினர் ஈடுபட்டனர். 36 மணி நேரத்தில் இரவு பகலாக பாலம் அமைத்து மீட்பு பணிகளை தொடங்கி உள்ளனர்.. முன்னதாக பாலம் அமைக்கும் வரை தற்காலிகமாக மரப்பாலம் அமைத்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வந்தனர். நேற்று இரும்பு பாலம் அமைக்கும் பணி முடிவடைந்தால், ராணுவ வாகனங்கள் மூலம் மீட்பு பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் நிலச்சரிவால் முண்டக்கை மலை கிராமம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு எத்தனை பேர் இறந்தார்கள் என்றே தெரியவில்லை.. பலரையும் காணவில்லை.. அங்கு யார் யார் வீடுகள் எங்கிருந்து. எத்தனை பேர் எந்நெந்த வீடுகளில் இருந்தார்கள். அவர்கள் வீடுகள் இருந்த இடங்கள் என்ன என்பது குறித்து அலவி என்பவர் தான் கூறி வருகிறார்.. அவர் முண்டக்கை தேவாலயத்திற்கு அருகில் ஜேசிபி மூலம் தேடுதல் நடவடிக்கைகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறார். அவர் தான் அடிக்கடி ஜேசிபி இயந்திரத்தை ஓட்டுபவரை அணுகி, தேவலாயத்தை சுற்றி முழுவதுமாகத் தேடுவதையும், ஒரு உடலைக்கூட மீட்காமல் விடக்கூடாது என்பதையும் உறுதி செய்து வருகிறார்.
மனதில் ஆயிரம் கவலைகள் இருந்தாலும், புன்னகையுடன், அந்தப் பகுதி மக்களுடன் கூடிய ஆழமான தொடர்பை பற்றி விவரிக்கும் அலவியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பலர் தேவாலயத்திற்கு அருகில் வசித்து வந்துள்ளார்கள். அவர்கள் அனைவரையும் இப்போது காணவில்லை. அவர்களின் பெயர்கள், குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தார்கள், இறந்தவர்கள் யார் யார் மற்றும் அவர்களின் வீடு எங்கிருந்தது போன்ற தகவல்களை அலவி தான் ராணுவத்திற்கு கூறி வருகிறார்.
அலவி மலையாளத்தில் கூறும் தகவல்களை கேட்டு பெறும் மலையாளம் தெரிந்த சிப்பாய் ஒருவர், இந்தியில் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புகிறார். இன்னொரு சிப்பாய் அலவி சொல்வதை முழுமையாக எழுதியபடி இருக்கிறார். அலவி போன்ற உள்ளூர்வாசிகளின் தகவல் மிகவும் உதவிகரமாக இருக்கிறது எனறு இராணுவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

முண்டக்கை மலை கிராமத்தில் முதல் நிலச்சரிவு எப்படி ஏற்பட்டது குறித்து அலவி கூறுகையில், "கனமழையால் அடித்து வரப்பட்ட மரங்கள் மற்றும் குப்பைகள் சீதம்மகுண்டில் குவிந்து அணை போன்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறது. அது உடைந்தது தான் முதல் நிலச்சரிவுக்கு காரணம். இரண்டாவது இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட போது மரங்கள் மற்றும் கற்பாறைகள் பலத்த சத்தத்துடன் சரிந்து விழுந்தன. இது சூரல் மலை அழிந்து போக காரணமாக இருந்திருக்கும்.
முண்டகை பகுதியை பொறுத்தவரை நிலச்சரிவு ஏற்பட்ட உடனேயே பலர் புஞ்சிரிமட்டத்திற்கு வேகமாக ஓடி சென்று தப்பிக்க முயன்றார்கள். அத்துடன் நிலச்சரிவு குறித்து தகவலும் தெரிவித்துள்ளார்கள். ஆனால் நிலச்சரிவு குறித்து தகவல் தெரிவித்தாலும், நிலைமையின் தீவிரம் வெளியில் தெரியாமல் இருந்துள்ளது. நாங்கள் சுமார் 200 பேர் அருகில் உள்ள ரிசார்ட்டில் இரவும் பகலும் கழித்தோம். பின்னர், மீட்புக்குழுவினர் வந்து எங்களை கீழே இறக்கினார்கள். இந்த இடத்தில் தண்ணீர் காட்டாறாக பாய்ந்து வந்தது (தண்ணீர் ஓடிய ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக்காட்டி), நான்கு பெங்காலி தொழிலாளர்கள் இந்த பகுதியில் இருந்தார்கள். அவர்களை பற்றி எந்த தகவலும் இப்போது வரை தெரியவில்லை" என்றார் அலவி.
இராணுவத்தின் மீட்புக் குழுவிக்கு அலவி கொடுத்த தகவல்கள் தான் பலரை மீட்க உதவி உள்ளது. கடும் சவாலான வயநாடு முண்டக்கை பகுதி புவியியல் ரீதியாக எப்படி இருக்கும் மற்றும் அங்குள்ள அபாயங்களை நன்கு புரிந்து கொள்ள ராணுவத்திற்கு அலவி கொடுத்த தகவல்கள் தான் உதவியாக இருந்துள்ளது.












Click it and Unblock the Notifications