கேரள வெள்ளம்.. நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு.. ராகுல் புகார்
வயநாடு: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு இழப்பீடுத் தொகை வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த மாதம் கேரளாவில் கொட்டித்தீர்த்த கனமழையால் அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக வயநாடு,மலப்புரம், உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு எற்பட்டு பலர் உயிரிழந்த சோக நிகழ்வும் நடந்தது. இந்நிலையில் வெள்ளத்திற்கு பிறகு வயநாடு தொகுதிக்கு நேற்று இரண்டாவது முறையாக சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார் ராகுல்காந்தி.

முகாம்
அடுத்த சில நாட்களுக்கு தனது தொகுதியான வயநாட்டில் முகாமிட்டு வெள்ள நிவாரண முகாம்களை பார்வையிட உள்ளதாக ராகுல் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணிகள் நிறைய செய்யப்பட்டுள்ளதாகவும், இருபினும் தானே அதனை நேரடியாக ஆய்வு செய்து நிவாரண பணிகளை இன்னும் முடுக்கிவிட உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசு பாரபட்சம்
கேரளாவில் இயற்கை பேரிடரால் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து நிற்கதியாய் மக்கள் தவிக்கும் நேரத்தில் மத்திய அரசு பாரபட்சமாக நடந்துகொள்கிறது என ராகுல் புகார் கூறியுள்ளார். நேற்று வயநாட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேரிடர் சம்பவம் ஒரு துயரமான நிகழ்வு எனத் தெரிவித்துள்ளார்.

மக்கள்
வெள்ளத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில் கூட வயநாடு தொகுதி மக்கள் பெரிய மனதுடன் நடந்துகொள்வதாக கூறியிருக்கிறார். இழப்பீடு வழங்கவேண்டும் என்பது தான் தற்போதைய பிரதான விவகாரம் எனக் கூறியதோடு, மத்திய அரசு பாரபட்சத்துடன் செயல்படுவதாக புகார் தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசுக்கு அக்கறையில்லை
கேரளாவில் பாஜக அதிகாரத்தில் இல்லை என்பதால், அம்மாநில மக்களை பற்றி மத்திய அரசுக்கு துளியும் அக்கறையில்லை என சாடியிருக்கிறார். இந்நிலையில் ராகுல் குற்றச்சாட்டுக்கு கேரளாவை சேர்ந்த மத்திய அமைச்சர் முரளீதரன் மறுப்பு தெரிவித்துள்ளதோடு பதிலடி தரவும் தயாராகி வருகிறார்.












Click it and Unblock the Notifications