தலைமறைவாக உள்ள கர்ணனை கண்டுபிடிக்க ஒத்துழைப்பு தாங்க... தமிழக டிஜிபிக்கு மேற்கு வங்க டிஜிபி கடிதம்
தலைமறைவாக உள்ள நீதிபதி கர்ணனை கண்டுபிடிக்க தமிழக காவல்துறை ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு மேற்கு வங்க டிஜிபி கடிதம் எழுதியுள்ளார்.
கொல்கத்தா: நீதிபதி கர்ணன் தமிழகத்தில் பதுங்கி இருப்பதால் அவரை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு மேற்கு வங்க டிஜிபி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன் தலைமை நீதிபதி கவுல் உள்ளிட்ட பல நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறினார். இதற்கு நீதிபதிகள் மத்தியில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த கர்ணனின் கருத்தை எதிர்த்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றப்பட்டார்.
இதனிடையே, நீதிமன்ற அவமதிப்பு விசாரணையின் போது நீதிபதி கர்ணனனுக்கு மனநல பரிசோதனைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குத்தான் மன நலன் சரியில்லை என்றும் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி கர்ணன் பதில் உத்தரவு பிறப்பித்தார்.
இதனால் கோபத்தின் எல்லைக்கே சென்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் பலமுறை மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அவர் தாக்கல் செய்த அத்தனை மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இன்று அவர் பணி ஓய்வு பெற்றார். தொடர்ந்தும் அவர் தலைமறைவாகவே உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மேற்கு வங்க அரசு தலைமறைவாக உள்ள கர்ணன் தமிழகத்தில் பதுங்கியிருப்பதாகவும் அவரை கைது செய்யவும் முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து கர்ணனை கண்டுபிடிக்க தமிழக காவல் துறை ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு மேற்கு வங்க டிஜிபி கடிதம் எழுதியுள்ளார். இதனால் தேடுதல் வேட்டை உடனடியாக ஆரம்பமாகும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications