ஆமா.. தெரியாமத்தான் கேட்கிறேன்.. டெல்லி மட்டும் ஏன்? நாட்டுக்கு தேவை 4 தலைநகர்.. மாஸ் காட்டிய மமதா!
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் களை கட்ட ஆரம்பித்து உள்ளது . திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் பாஜகவை தாக்க பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்.
"டெல்லி மட்டும் ஏன் தலைநகராக இருக்கவேண்டும்.. நாட்டுக்கு நான்கு தலைநகரம் தேவை" என்று மமதா பானர்ஜி தடாலடி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாள் தினத்தையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மமதா பானர்ஜி பங்கேற்றார். அப்போது அவர் ஆவேசமாக பேசியதை பாருங்கள்:
வடக்கே, கிழக்கே
நமது நாட்டுக்கு எதற்காக ஒரே ஒரு தேசிய தலைநகர் இருக்க வேண்டும். வடக்கு, தெற்கு கிழக்கு மற்றும் மேற்கு இந்தியாவுக்கு என்று தனித்தனி தலைநகரங்கள் இருக்க வேண்டும்.
4 தலைநகரம்
இந்த நான்கு நகரங்களையும் சுழற்சிமுறையில் தலைநகராக கூட பயன்படுத்தலாமே. எதற்காக அனைத்து முக்கியமான விஷயங்களும் டெல்லி நகருக்குள் முடங்கி இருக்க வேண்டும். இந்த விவகாரம் பற்றி கேள்வி எழுப்ப திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை நான் கேட்டுக்கொள்ள இருக்கிறேன். நமது எண்ணத்தில் மாற்றங்கள் தேவை. ஒரே ஒரு நாடுக்கு, ஒரே ஒரு தலைவர் போன்ற கொள்கைகள் சரிப்படாது.
நேதாஜி பெயர் மாற்றம்
நேதாஜி துறைமுகம் என்ற பெயரை சியாம பிரசாத் முகர்ஜி பெயரில் மாற்றம் செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது கண்டனத்துக்குரியது. நேதாஜி மீது மிகவும் பாசம் இருப்பதைப்போல பாஜக காட்டிக் கொள்கிறது. ஆனால் அவரது பெயரில் அமைந்த துறைமுகத்தின் பெயரை மாற்றுவதற்கு முயற்சி செய்கிறது.
மாற்றி நடப்பது
ஒருபக்கம் வேறு மாதிரி பேசுவது.. நடைமுறையில் வேறு மாதிரி நடந்து கொள்வது பாஜக வாடிக்கை . இவ்வாறு மமதா பானர்ஜி பேசினார். இந்த கூட்டத்தில் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.