மகளிர் ஆணைய தலைவரை நீக்கினால் 'சட்ட வெடிகுண்டு வீசப்படும்': காங்கிரஸ் திட்டவட்டம்

காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட ஆளுநர்களை பதவிவிலக தற்போதைய மோடி தலைமையிலான அரசு நெருக்கடி அளித்துவருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சில ஆளுநர்கள் பதவி விலகிவிட்டனர், மேலும் சிலர் பதவி விலக தயாராக உள்ளனர்.
இதேபோல பிரதமர் தலைமையிலான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரையும் ராஜினாமா செய்யுமாறும் அரசு கேட்டுக்கொண்டது. இந்த வரிசையில் தற்போது தேசிய பெண்கள் ஆணையம், தாழ்த்தப்பட்டோர் ஆணையம், பழங்குடியினர் ஆணையம் ஆகியவற்றின் தலைவர்களை பதவி விலகுமாறு மத்திய அரசு வற்புறுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் பாஜக அரசு நினைப்பதை போல இது அவ்வளவு எளிதான வேலை கிடையாது. அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 338ன்கீழ் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் கமிஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பதவியில் நியமிக்கவும், நீக்கவும் பல வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். நெருக்கடி மூலமாக இப்பதவிகளில் உள்ளவர்களை நீக்க மத்திய அரசு முயன்றால், கோர்ட்டில் வழக்கு தொடரலாம். அப்படி வழக்கு தொடர்ந்தால், மத்திய அரசுக்கு எதிராகவே தீர்ப்பு வெளியாக வாய்ப்பு அதிகம்.
எனவேதான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஐந்தாண்டு பதவிக்காலத்தில், முந்தைய பாஜக ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட இந்த கமிஷன்களின் தலைவர்களை நீக்க முற்படவில்லை. இதுகுறித்து தாழ்த்தப்பட்டோர் கமிஷன் தலைவர் புனியா கூறுகையில், என்னை பதவியில் நியமிக்க செய்யும் அதிகாரம் படைத்தவர் குடியரசுதலைவர்தான். அவரிடமிருந்து எனக்கு இதுகுறித்து எந்த தகவலும்வரவில்லை. அப்படி தகவல் வந்தால் அதுகுறித்து நான் பரிசீலிப்பேன் என்றார்.
இதனிடையே பொறுத்தது போதும், இனிமேல் தாங்க முடியாது என்ற மன நிலையில் காங்கிரஸ் உள்ளது. 'முக்கியமான இம்மூன்று ஆணையங்களின் தலைவர்கள் பதவியை மத்திய அரசு பறிக்க முற்பட்டால், சட்ட வெடிகுண்டு வீசப்படும்' என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications