மேகாலயாவில் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம்.. இன்று இரவே ஆட்சியமைக்க உரிமை கோருவோம்.. காங். தடாலடி!
மேகாலயாவில் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஷில்லாங்: மேகாலயாவில் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மேகாலயா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. இதில் 59 தொகுதிகளை கொண்ட மேகாலயாவில் காங்கிரஸ் அதிகபட்சமாக 21 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.
என்பிபி 19 தொகுதிகளையும் பாஜக 2 தொகுதிகளையும் கைப்பற்றின, யுடிபி, சுயேச்சை உள்ளிட்டவை 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

மேகாலயாவில் தொங்கு சட்டசபை
எந்தக்கட்சியும் ஆட்சியமைக்க தேவையான இடங்களை கைப்பற்றாததால் மேகாலயாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த பத்தாண்டுகளாக மேகாலயாவில் ஆட்சிபுரிந்து வரும் காங்கிரஸ் தற்போதும் ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி வருகிறது.

ஆட்சியமைக்க தீவிரம்
இந்நிலையில் தற்போது அதிக இடங்களை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சி எப்படியாவது ஆட்சியமைக்க வேண்டும் என தீவிரமாக உள்ளது. இந்நிலையில் மேகாலயாவில் ஆட்சியமைப்பது குறித்து ஆராய அக்கட்சியின் மூத்த தலைவர்களான அகமது பட்டேல் மற்றும் கமல்நாத்தை காங்கிரஸ் தலைமை பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

நாங்கள்தான் ஆட்சியமைப்போம்
செய்தியாளர்களிடம் பேசிய அகமது பட்டேல் கோவா, மணிப்பூர் மாநிலங்களில் நடைபெற்றது போல் மீண்டும் நடக்காது என்றார். இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய கமல்நாத், மேகாலயாவில் நாங்கள்தான் ஆட்சியமைப்போம் என்பது தெளிவாகியுள்ளது என்றார். மக்களின் எண்ணம் காங்கிரஸ் ஆட்சியில் வெளிப்பட்டது என்றும் அவர் கூறினார்.

இரவே உரிமைகோருவோம்
மற்றவர்களுடன் நாங்கள் தொடர்பில் தான் உள்ளோம் என்றும் மற்றவர்களும் எங்களுடன் தொடர்பில் தான் உள்ளனர் என்றும் அவர் கூறினார். மேலும் இன்று இரவே ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோருவோம் என்றும் அவர் கூறினார். பாஜக பணத்தை பயன்படுத்தி ஆட்சியமைப்பதில் இடையூறு ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் கமல்நாத் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications