ஆஸி.யில் நடப்பது ஆரம்பம் தான்... நாளை பெங்களூருவைத் தாக்குவோம்: ஐஎஸ்ஐஎஸ் மிரட்டல்
பெங்களூரு: ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து நாளை பெங்களூருவில் தாக்குதல் நடத்துவோம் என டுவிட்டர் வாயிலாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சுமார் 50க்கும் அதிகமான பொதுமக்களை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். ஹோட்டலில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொடி ஏற்றப் பட்டுள்ளது.
ஏற்கனவே 5 பேர் தப்பி வந்து விட்ட சூழலில், தீவிரவாதிகள் வசம் சிக்கியுள்ள மீதமுள்ள பொதுமக்களை மீட்க போலீசார் போராடி வருகின்றனர். பிணைக்கைதிகளில் ஒருவர் இந்தியர் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உறுதி செய்துள்ளார்.

இதற்கிடையே கடந்த சனிக்கிழமையன்று பெங்களூர் எம்.என்.டி நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்த மேதி என்ற இளைஞரைப் பெங்களூரு போலீசார் கைது செய்தனர். அவர் மீது, ஷமி என்ற பெயரில் டுவிட்டர் வாயிலாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேதி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று பெங்களூரு போலீசாருக்கு டுவிட்டர் வாயிலாக மிரட்டல் விடுக்கப் பட்டது. அதில், இதற்குப் பழிக்குப் பழி வாங்குவோம் எனத் தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில், இஸ்லாமிக் ஸ்டேட் மீடியா என்ற ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு டுவிட்டர் பக்கத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளதாகத் தெரிகிறது. அதில், ‘சிட்னி சம்பவம் ஒரு ஆரம்பம் தான். ஷமிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பெங்களூரு மீது நாளை தாக்குதல் நடத்துவோம். பெங்களூரு பெரும் விளைவை சந்திக்கும்' என மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது.
ஆனால், இவ்வாறு மிரட்டல் எதுவும் வரவில்லை என பெங்களூரு போலீசார் மறுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications