பணக்கார ஆதரவு மோடி அரசை வீழ்த்த வேண்டும்.. கர்நாடக பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி ஆவேசம்
பெலகாவி: மோடி அரசை வீழ்த்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி பொதுக்கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் (பெல்காம்) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: பண மதிப்பிழப்பு அறிவிப்பு மோடியால் உருவான ஒரு பேரழிவு.
நாட்டில் 1 சதவீதம் பேர்தான் கருப்பு பணம் வைத்துள்ளனர். ஆனால் 99 சதவீதம் மக்கள் ஏழை, எளியவர்கள்தான். இவர்கள்தான் மோடி அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கருப்பு பணத்தை ஒழிக்க மோடி முயன்றிருந்தால் காங்கிரஸ் ஒத்துழைப்பு கொடுத்திருக்கும். ஆனால் கருப்பு பண ஒழிப்பு விஷயத்தில் மோடி ஒரு பொய்யர் என மக்கள் சொல்கிறார்கள்.
விஜய் மல்லையா வாங்கிய கடனை ஏன் தள்ளுபடி செய்தீர்கள் என நான் மோடியை பார்த்து கேட்க விரும்புகிறேன். நாட்டில் வேலையில்லாத திண்டாட்டம் பெருகியுள்ளது.
மோடி பணக்காரர்களுக்காக அரசு நடத்துகிறார். 50 குடும்பங்களுக்காகவே அவரது அரசு நடவடிக்கைகள் அமைகின்றன. பணக்காரர்களுக்கான இந்த அரசை (சூட் பூட் சர்க்கார்) டெல்லியிலிருந்து அகற்ற வேண்டும். காங்கிரஸ் எப்போதுமே ஏழைகளுக்காக போராடும் கட்சி.
பாஜக தலைவர்கள் பலருக்கும், ரூபாய் நோட்டு அறிவிப்பு குறித்து முன்கூட்டியே தெரியும். மேற்கு வங்க பாஜகவினர், நோட்டு அறிவிப்பு வெளியாகும் முன்பு பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.