மேற்கு வங்கத்தில் உச்சம் தொட்ட வாக்குப்பதிவு.. முதற்கட்ட தேர்தலில் 92.88% ஓட்டுகள் பதிவு
கொல்கத்தா: தமிழகத்தை போல் இன்று மேற்கு வங்க மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அங்கு மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் முதற்கட்டமாக இன்று 152 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில இதுவரை இல்லாத வகையில் 92.88 சதவீதம் அளவுக்கு வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. மேற்கு வங்கம்.. ஒரு காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்தது. ஆனால் கடந்த 2011ல் அந்த கோட்டையை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உடைத்தது.

2011, 2016, 2021 என தொடர்ந்து 3 முறை திரிணாமுல் காங்கிரஸ் 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது. அந்த கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி 3 முறை தொடர்ந்து முதல்வராகி உள்ளார். இப்போது 4வது முறையாக முதல்வராகும் முனைப்பில் தேர்தலை சந்திக்கிறார்.
152 தொகுதிகளில் இன்று தேர்தல்
தமிழகத்தை போல் இன்று மேற்கு வங்கத்திலும் சட்டசபை தேர்தல் நடந்தது. மேற்கு வங்கத்தில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
மெஜாரிட்டிக்கு 148 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் இன்று முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடந்தது. இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு வரும் 29ம் தேதி 142 தொகுதிகளில் நடைபெறுகிறது. அதன்பிறகு மே 4ல் ரிசல்ட் வெளியாக உள்ளது.
92.88% வாக்குப்பதிவு
தேர்தல் ஆணையம் அறிவித்தபடி இன்று முதற்கட்ட தேர்தலில் மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்களில் 152 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.. இதில் 103 தொகுதிகள் பொதுத்தொகுதிகளாகும். 34 தொகுதிகளில் தலித் மக்களுக்கான தனித்தொகுதியாகும். 15 தொகுதிகள் பழங்குடியின மக்களுக்கான தனித்தொகுதிகளாக உள்ளன.
இந்த தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலையிலேயே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை செலுத்தினர். விறுவிறுப்பாக தேர்தல் நடந்தது. இறுதியாக 92.88 சதவீத வாக்குகள் பதிவானது.
மொத்த வாக்காளர்கள் எவ்வளவு?
இந்த முதற்கட்ட தேர்தலில் மொத்தம் 3 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்தனர். இவர்களில் 1 கோடியே 84 லட்சம் பேர் ஆண்கள், 1 கோடியே 75 லட்சம் பேர் பெண்கள் மற்றும் 465 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். பொதுமக்கள் சிரமமின்றி வாக்களிக்க மொத்தம் 44,376 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. .
தேர்தல் பாதுகாப்பிற்காக 2,450 கம்பெனி (சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம்) துணை ராணுவப்படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 91 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே கடும் வார்த்தைப் போர் நிலவி வரும் சூழலில், இந்தத் தேர்தல் நடைபெற்றது.
முக்கிய வேட்பாளர்கள் யார் யார்?
இன்று நடந்த முதற்கட்ட தேர்தலில் மொத்தம் 1,478 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பாஜகவின் சுவேந்து அதிகாரி போட்டியிடும் நந்திகிராம் சட்டசபை தொகுதி, காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பஹராம்பூர்தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதில் நந்திகிராம் சட்டசபை தேர்தலில் கடந்த 2021 ம் ஆண்டில் மம்தா பானர்ஜியை சுவேந்து அதிகாரி வீழ்த்தியிருந்தார். இந்த முறை சுவேந்து அதிகாரியை எதிர்த்து மம்தா பானர்ஜி களமிறங்கவில்லை.
எந்தெந்த கட்சிகள் இடையே போட்டி?
இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், எதிர்கட்சியாக உள்ள பாஜக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணி இடையே நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் பாரதியா கேர்கா பிரஜாதந்திரிக் மோர்ச்சா என்ற கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டள்ளது.
மாறாக, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தனித்து களமிறங்கி உள்ளன. கம்யூனிஸ்ட் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் பார்வர்ட் பிளாக், புரட்சிகர இந்திய கம்யூனிஸ்ட், அனைத்திந்திய பார்வர்ட் பிளாக், இந்திய கம்யூனிஸ்ட், புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி உள்ளிட்டவை கூட்டணியில் உள்ளன. இவர்கள் தவிர மாயாவதியின் பகுஜன் சமாஜ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் தனித்து களமிறங்கி உள்ளன. இத்தனை கூட்டணிகள் இருந்தாலும் நேரடி போட்டி என்பது மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காஙகிரஸ் - பாஜக இடையே தான் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2021 தேர்தல் முடிவு என்ன?
முன்னதாக கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 294 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 215 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சி ஒரு தொகுதியை கைப்பற்றியது. பாஜக 77 இடங்களில் வெற்றி பெற்றது. ஐஎஸ்எப் எனும் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் தோற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications