'சைலண்ட்' புரட்சி.. எகிறிய வாக்குப்பதிவு.. மாற்றத்திற்கு தயாராகும் களம்? 4 முக்கியமான பாயிண்டுகள்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நேற்றைய தினம் முதற்கட்ட வாக்குப்பதிவில் 90% தாண்டி வாக்குகள் பதிவாகி இருந்தது. அங்கு இந்தளவுக்கு வாக்குப்பதிவுகள் அதிகரிக்க 4 முக்கியமான காரணங்களைச் சொல்கிறார்கள். வாக்குப்பதிவு இந்தளவுக்கு அதிகரிக்க என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 92.59% என்ற பிரம்மாண்டமான வாக்குப்பதிவு ஒரு முக்கியமான வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம் இதை வெறும் எண்களாகப் பார்க்காமல், அதன் பின்னால் இருக்கும் சமூக மற்றும் அரசியல் காரணங்களை நாம் ஆழமாகப் பார்க்க வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள் உள்ளன. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

1. அதிக வாக்குப்பதிவு = ஆட்சி மாற்றமா?
பாரம்பரியமாக, அதிக வாக்குப்பதிவு நடந்தால் அது ஆளுங்கட்சிக்கு எதிரான அலை என்று கருதப்படும். ஆனால், தற்கால இந்திய அரசியலில் இது எப்போதும் உண்மையாக இருப்பதில்லை. பல நேரங்களில் ஆளுங்கட்சியின் நலத்திட்டங்களால் கவரப்பட்ட மக்கள், மீண்டும் அதே ஆட்சி தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் பெருமளவில் வாக்களிக்க வருவதும் உண்டு. சமீபத்தில் நடந்து முடிந்த பீகார், மகாராஷ்டிரா தேர்தல்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
2. பெண் வாக்காளர்களின் "சைலண்ட்" புரட்சி
இந்தத் தேர்தலில் பெண் வாக்காளர்களின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக மம்தா பானர்ஜியின் 'லட்சுமீர் பண்டார்', நம்ம ஊர் மகளிர் உரிமை தொகை போன்ற திட்டம், பெண்களிடையே பலமான ஆதரவை உருவாக்கியுள்ளன. மேற்கு வங்கத்தில் பல ஆண்கள் வேலைக்காக வெளிமாநிலங்களுக்குச் செல்வதால், வீட்டில் இருக்கும் பெண்கள் நிலையான ஒரு வாக்கு வங்கியாக மாறியுள்ளனர். எனவே, பெண்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை வெற்றி தோல்வியே தீர்மானிக்கும். பொதுவாக அங்குப் பெண்களின் வாக்குப்பதிவு ஆண்களை விட 4-6% அதிகரிக்கும்போது, அது பெரும்பாலும் ஆளுங்கட்சிக்கே சாதகமாக முடிகிறது.
3. எஸ்ஐஆர் தாக்கம்
தேர்தல் ஆணையம் சுமார் 91 லட்சம் பெயர்களைப் பட்டியலிலிருந்து நீக்கியது 'இரட்டை முனை கத்தி' போன்றது.. மொத்த வாக்காளர் எண்ணிக்கை குறைந்ததால், பதிவான வாக்குகள் சதவீத அடிப்படையில் அதிகமாகத் தெரிகிறது. அதேநேரம் தங்கள் உறவினர், அக்கம் பக்கத்தினர் பெயர்கள் நீக்கப்பட்டதால் ஏற்பட்ட கோபம் அல்லது அதிருப்தி, சில இடங்களில் பாஜகவுக்கு எதிராகத் திரும்பவும் வாய்ப்புள்ளது.
4. அச்சம் மற்றும் பாதுகாப்பு
குடியுரிமை குறித்த பயமும் அங்கு மக்களிடையே இருக்கிறது.. வெளிமாநிலங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், தங்களின் வாக்குரிமை அல்லது குடியுரிமைக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் சொந்த ஊர் திரும்பி வாக்களித்துள்ளனர். அதாவது இந்த தேர்தலில் வாக்களிக்காமல் விட்டால் அது எங்கு எதிர்காலத்தில் வாக்குரிமைக்குச் சிக்கலை ஏற்படுத்துமோ என நினைத்து பலரும் சொந்த ஊர் வந்து வாக்களித்துள்ளனர். மேலும், அதிகப்படியான ராணுவப் பாதுகாப்பு, வாக்காளர்களுக்கு ஒருவிதப் பாதுகாப்பு உணர்வைத் தந்து, அவர்களை அச்சமின்றி வாக்குச் சாவடிக்கு வரவழைத்துள்ளது.
பாஜக 40% வாக்கு வங்கியை நெருங்கும் அளவிற்கு வளர்ந்திருந்தாலும், மம்தா பானர்ஜியிடம் இருக்கும் 'ஒருங்கிணைந்த சிறுபான்மையினர் வாக்குகள்' மற்றும் 'உறுதியான நலத்திட்டப் பயனாளிகள்' ஆகியோரைத் தாண்டி வெற்றி பெறுவது சவாலான காரியம். அதாவது இந்த தேர்தலில் பாஜகவின் பெர்பாமன்ஸ் மம்தாவை ஆட்டுவிக்குமே தவிர அவரது அரியணையைப் பறித்துவிடாது.
அடுத்து என்ன
92.59% வாக்குப்பதிவு என்பது வெறும் சாதனையல்ல; அது மேற்கு வங்க மக்கள் எவ்வளவு தீவிரமாக அரசியலில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகள் மம்தாவை நோக்கி ஒருமுகப்பட்டிருந்தால், இந்த அதிக வாக்குப்பதிவு அவருக்கு ஒரு வெற்றி மகுடமாக' அமைய வாய்ப்புகளே அதிகம் என்கிறார்கள்.














Click it and Unblock the Notifications