மம்தா பானர்ஜிக்கு ‘குட்பை'.. மேற்கு வங்கத்தில் பாஜக அமோக வெற்றி பெற வாய்ப்பு.. டுடேஸ் சாணக்யா கணிப்பு
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த15 ஆண்டுகளாக ஆட்சி செய்த முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்த முறை தோல்வியை தழுவுவதோடு, பாஜக அமோக வெற்றி பெறும் என்று Today's Chanakya கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடக்கும் பட்சத்தில் மம்தா பானர்ஜியின் 15 ஆண்டுகால திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வரும்.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகிறார். இங்கு மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு 148 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

இந்த முறை மேற்கு வங்கத்தில் கடந்த 23ம் தேதி முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கும், நேற்று 2வது கட்டமாக 142 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்தது. தமிழகத்தை போல் மே 4ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
பாஜக அமோக வெற்றி
இதற்கிடையே தான் எக்ஸிட் போல் எனும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இன்று Today's Chankya சார்பில் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பாஜகவிடம் ஆட்சியை இழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பாஜக 192க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பபட்டுள்ளது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 100+ இடங்களில் மட்டுமே வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்று டூடேஸ் சாணக்யா கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜி கட்சிக்கு அடி
இது நடக்கும் பட்சத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும். அதோடு மேற்கு வங்கம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்பது உடைக்கப்படும். இங்கு கடந்த 2011 ல் முதல் முறையாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மம்தா பானர்ஜி முதல்வரானார். அதன்பிறகு 2016, 2021 சட்டசபை தேர்தல்களில் மம்தா பானர்ஜி வென்று ஆட்சியை தக்கவைத்து கொண்டார்.
ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து இந்த முறை 4வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் மம்தா பானர்ஜி உள்ளார். அதேவேளையில் மேற்கு வங்கத்தில் முதல் முறையாக எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று பாஜக பிரசாரம் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தான் டூடேஸ் சாணக்யா கருத்து கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக அமோக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு விழும் அடியாக பார்க்கப்படுகிறது.
கடந்த முறை என்ன நடந்தது?
அதேவேளையில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எக்ஸிட் போல் கணிப்புகள் அனைத்தும் அப்படியே நடப்பது இல்லை. உதாரணமாக கடந்த 2021ம் ஆண்டில் மேற்குவங்க மாநில சட்டசபை தேர்தலில் பாஜக தான் ஆட்சியை பிடிக்கும் என்று பல கருத்து கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் அந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 215 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்கவைத்தது. பாஜக வெறும் 77 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது என்பதை மறந்து விட வேண்டாம்.
பிற கருத்து கணிப்புகளின் முடிவுகள்
இருப்பினும் கூட இந்த முறையும் பல கருத்து கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ளன. மேட்ரிஸ் கருத்து கணிப்பின்படி பாஜக 146 முதல் 161 தொகுதிகளிலும், திரிணாமல் காங்கிரஸ் 120 முதல் 140 தொகுதிகளிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பி -மார்க் கருத்து கணிப்பில் பாஜக 150 முதல் 175 சீட்டுகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 118 முத்ல 138 தொகுதிகளிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.
போல் டைரி கணிப்பின்படி பாஜக 142 முதல் 171 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 99 முதல் 127 தொகுதிகளிலும் வாகை சூடலாம் என கணிக்க்பபட்டுள்ளது. Chanakya Strategies கணிப்பில் பாஜக 150-160 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 130 முதல் 140 தொகுதிகளிலும் வெல்லலாம் என கூறப்பட்டுள்ளது.
மம்தாவுக்கு சாதகமான கணிப்பு
அதேவேளையில் பீப்பிள் பல்ஸ் கருத்து கணிப்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வந்துள்ளது. அதில் திரிணாமுல் காங்கிரஸ் 177-187 தொகுதிகள் வரை வெற்றி பெறும் எனவும், ஜன்மத் போல்ஸ் கருத்து கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் 195-205 இடங்களிலும் வெல்லும் எனகூறப்பட்டுள்ளது ஜேவிசி கருத்து கணிப்பில் பாஜகவுக்கு 138-159 தொகுதிகளில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 131-152 தொகுதிகளிலும் வெல்ல சான்ஸ் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கருத்து கணிப்புகள் இப்படி வெளிவந்தாலும் கூட உண்மையாக மக்களின் தீர்ப்பு யார் பக்கம் உள்ளது? என்பதை அறிய நாம் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4 வரை பொறுத்திருக்க வேண்டும். அன்றைய தினம் தான் மேற்கு வங்க மக்களின் தீர்ப்பு முழுமையாக தெரியவரும்.












Click it and Unblock the Notifications