மேற்கு வங்கத்தில் ஆதிவாசிப் பெண் கொடூர பலாத்காரம்.. உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்- நோட்டீஸ்
சூரி, மேற்கு வங்கம்: மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில், அந்தக் கிராமத்து தலைவர் போட்ட உத்தரவைத் தொடர்ந்து பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இளம் பெண்ணை ஒரு மிருகத் தனமான கும்பல், நடு ரோட்டில் வைத்து ஊரே கூடி நின்று வேடிக்கை பார்க்க பாலியல் பலாத்காரம் செய்த செயல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
மிகவும் கொடூரமான அக்கிரமச் செயல் இது என்றும் உச்சநீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
சபல்பூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பழங்குடியின பெண் வேறு ஜாதியைச் சேர்ந்த வாலிபரை காதலித்தார். இது குறித்து அறிந்த பஞ்சாயத்தினர் மாற்று ஜாதி ஆணை காதலித்த குற்றத்திற்காக ரூ.50,000 அபராதம் விதித்தனர்.

அந்த பெண் அபராதத்தை செலுத்தாததால் பஞ்சாயத்து கூடி அந்த பெண்ணையும், அவரது காதலரையும் கடந்த திங்கட்கிழமை முழுவதும் சிறை பிடித்து வைத்தனர். தங்களால் அவ்வளவு பெரிய தொகையை அபராதமாக செலுத்த முடியாது என்று அப்பெண்ணின் பெற்றோர் பஞ்சாயத்தில் தெரிவித்தனர்.
இதையடுத்து அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யுமாறு பஞ்சாயத்து கடந்த செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து பஞ்சாயத்து உத்தரவுப்படி 12 வாலிபர்கள் சேர்ந்து அந்த பெண்ணை செவ்வாய்கிழமை இரவு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
கிராமத்தின் மையத்தில் வைத்து இந்த அராஜக காட்டுமிரான்டித்தனம் நடந்தது. ஊரே கூடி நின்று இதை வேடிக்கை பார்த்துள்ளது.
மறுநாள் காலை அந்த பெண்ணின் குடும்பத்தார் லாபூர் காவல் நிலையத்தில் நடந்தவை குறித்து புகார் தெரிவித்தனர். மேலும் தங்கள் மகளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பஞ்சாயத்து தலைவர் போலோய் மர்டி உள்பட 14 பேரை இதுவரைக் கைது செய்துள்ளனர்.
எஸ்.பி. இடமாற்றம்
இந்த சம்பவம் மேற்கு வங்கத்தைத் தாண்டி நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. ஒரு பெண் முதல்வராக உள்ள மாநிலத்தில் இ்ப்படி ஒரு கொடும் செயலா என கண்டனங்கள் குவிந்துள்ளன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பி சுதாகரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார் முதல்வர் மமதா பானர்ஜி.
அத்தனை பேரையும் பார்க்க உத்தரவிட்ட கிராமத் தலைவர்
நடந்த சம்பவம் குறித்து கிராமத்தினர் கூறுகையில், பாலியல் பலாத்காரம் செய்ய உத்தரவிட்ட கிராமத் தலைவர் போலோய் மர்டி, இந்த சம்பவத்தை அனைவரும் பார்க்க வேண்டும், குழந்தைகளும் இதைப் பார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், அனைவரும் பார்ப்பதற்கு வசதியாக ஒரு மூங்கில் மேடையையும் அமைக்க உத்தரவிட்டார். அதில் வைத்துத்தான் அக்கிரமத்தில் ஈடுபட்டனர் என்றனர்.
பாவம் அந்த அப்பாவி பெண்ணின் அலறல் விடிய விடிய அந்தக் கிராமத்தை அதிர வைத்துள்ளது. ஆனால் உதவி செய்யத்தான் ஒரு கரமும் வரவில்லை. யாருமே இந்த மிருகத்தனத்தை தடுத்து நிறுத்தவும் முன்வரவில்லை. அவரது குடும்பத்தினராலும் கூட தங்களது பெண்ணைக் காக்க முடியாமல் போனது.
மருத்துவ ஆதாரங்கள் சேகரிப்பு
பெரும் கொடுமைக்குள்ளான பெண்ணைப் பரிசோதித்த டாக்டர்கள், பலர் சேர்ந்து பலாத்காரம் செய்ததற்கான மருத்துவ ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பலாத்காரம் செய்ய கிராமத் தலைவர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து வயது வித்தியாசமே இல்லாமல் இளம் வயதினர், வயது முதிர்ந்தவர்கள் என பலரும் அராஜகத்தில் இறங்கியுள்ளனராம்.
சாந்திநிகேதனுக்கு அருகில்....
அக்கிரமச் செயல் நடந்த கிராமமானது, ரவீந்திர நாத் தாகூர் உருவாக்கிய கலை மற்றும் கல்வி மையமான சாந்திநிகேதனிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இன்னொரு துயரம்.
உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
இந்த சம்பவம் தற்போது உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. தானாக முன்வந்து உச்சநீதிமன்றம் வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் மேற்கு வங்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் அது உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பிர்பம் மாவட்ட மாஜிஸ்திரேட் நேரில் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அது உத்தரவிட்டுள்ளது.
சகிக்க முடியாத அக்கிரமச் செயல் இது என்றும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications