லீவு கேட்டா தரமாட்டியா? திடீரென கத்தியை கையிலெடுத்த அரசு ஊழியர்.. 4 சக பணியாளர்களுக்கு நேர்ந்த கதி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் லீவு கேட்டு கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் அரசு ஊழியர் தன்னுடன் பணியாற்றிய 4 பேரை கத்தியால் குத்திவிட்டு பேக்கை எடுத்து கொண்டு அலுவலகத்தில் இருந்து வெளியே சென்ற வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
மேற்கு வங்க மாநிலம் நார்த் 24 பர்கனாஸ் மாவட்டம் சோதிபூர் பகுதியில் உள்ள கோலா கிராமத்தை சேர்ந்தவர் அமித் குமார் சர்கார். இவர் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். தொழில்நுட்ப கல்வித்துறையில் ஊழியராக அவர் பணி செய்து வருகிறார்.

அமித் குமார் சர்கார் பணியாற்றும் அலுவலகம் கொல்கத்தா நியூ டவுனில் அமைந்துள்ளது. அங்குள்ள காரிகரி பவனில் தான் அமித் குமார் சர்கார் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் தான் நேற்று அமித் குமார் சர்கார் தனது உயரதிகாரிடம் விடுமுறை கேட்டுள்ளார். ஆனால் அவர் விடுமுறை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த அமித் குமார் சர்கார் கத்தியை எடுத்து மிரட்டியுள்ளதோடு, ஒருவரை குத்தியுள்ளார். தடுக்க முயன்ற மேலும் 3 பேரையும் ஆத்திரம் தாங்காமல் அடுத்தடுத்து குத்தி உள்ளார்.
திருச்சி தனியார் பள்ளி சூறை.. 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - தாளாளரின் கணவர் அதிரடி கைது
இதனால் 4 பேரும் ரத்தம் சிந்திய நிலையில் அலுவலகத்தில் நின்றனர். இதையடுத்து அமித் குமார் சர்கா மற்றவர்களிடம் கத்தியை காட்டி, ‛‛என் அருகே வந்தால் உங்களையும் கத்தியால் குத்திவிடுவேன்’’ என்று மிரட்டினார். அதன்பிறகு அலுவலகத்தில் இருந்த தனது பேக்கை தோளில் மாட்டிய அமித் குமார் சர்கார் இன்னொரு கையில் மற்றொரு பையை எடுத்து கொண்டார்.
மேலும் கத்தியில் ரத்தம் வடிய அதனை மற்றொரு கையில் வைத்து கொண்டு விறுவிறுவென அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். இதை பார்த்தவர்கள் அவரை பிடிக்க முயன்றனர். அப்போதும் கத்தியால் குத்திவிடுவேன் என்று மிரட்டியபடி நடந்து சென்றார். இறுதியாக போக்குவரத்து போலீஸ்காரர் கூறியதை தொடர்ந்து அமித் குமார் சர்கார் கத்தியை கீழேபோட்டுவிட்டு சரணடைந்தார்.
அமித் குமார் சர்கார், பிதான் நகர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதோடு அவர் கத்தியால் குத்திய 4 சக ஊழியர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைதான அமித் குமார் சர்காரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், தனது தந்தையை பற்றி தரக்குறைவாக பேசி கிண்டல் செய்ததால் கத்தியால் குத்தியதாக கூறியுள்ளார். ஆனால் அவர் விடுமுறை கேட்டு கிடைக்காத ஆத்திரத்தால் தான் கத்தியால் 4 பேரை குத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சரியான காரணம் என்ன? என்பதில் குழப்பம் உள்ளது. காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளதால் அவர்களிடம் விசாரித்த பிறகு தான் உண்மை காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications