மத வெறுப்பு நிகழ்ச்சிகள்.. சேனல்களுக்கு கடிவாளம் போட்ட மம்தா அரசு - கேபிள் ஆப்பரேட்டர்கள் மூலம் செக்
கொல்கத்தா: மதவெறுப்பை பரப்பும் நிகழ்ச்சிகளை வெளியிடும் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை உடனே நிறுத்துமாறு கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு மேற்கு வங்க அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் சாதி, மத ரீதியான மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு மத வெறுப்பு பேச்சுக்களே காரணமாக கூறப்படுகின்றன.
தொலைக்காட்சிகள், யூடியூப் சேனல்கள், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் மத வெறுப்பு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

தொலைக்காட்சி விவாதம்
குறிப்பாக அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். அதேபோல் அக்கட்சியின் நவீன் குமார் ஜிண்டாலும் முஹம்மது நபி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்திட்டார். நுபுர் ஷர்மாவின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

வழக்குப்பதிவு
கடும் எதிர்ப்பை தொடர்ந்து நுபுர் ஷர்மாவை இடைநீக்கம் செய்த பாஜக, நவீன் ஜிண்டாலை கட்சியிலிருந்தே நீக்கியது. மும்பையில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் மும்பை போலீஸ் திட்டமிட்டு இருக்கிறது. இதேபோல் டெல்லி, கொல்கத்தா போலீசும் நுபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.

போராட்டம்
நுபுர் ஷர்மாஅவை கண்டித்து அரபு நாடுகள், மலேசியா, இந்தோனேஷியா, பாகிஸ்தாம், ஆப்கானிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய நுபுர் ஷர்மா இன்னும் கைது செய்யப்படாத நிலையில், நாடு முழுவதும் அவரை கைது செய்ய வலியுறுத்தி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹவுரா வன்முறை
குறிப்பாக உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. குறிப்பாக மேற்கு வங்கத்தின் ஹவுரா பகுதியில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது இந்துத்துவ அமைப்பினர் உள்ளே புகுந்து தாக்கியதால் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இதனால் போலீசார் தடியடி நடத்தினர்.

ஊடகங்களுக்கு கடிவாளம்
இதுகுறித்து வட இந்திய ஆங்கில மற்றும் இந்தி ஊடகங்கள் மேற்கு வங்க அரசுக்கு எதிரான தவறான செய்திகளை வெளியிட்டதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. இந்த நிலையில் வெறுப்பு பிரச்சாரங்களுக்கு இடமளிக்கும் தொலைக்காட்சிக்கு மேற்கு வங்க அரசு கடிவாளம் போட்டுள்ளது. வெறுப்பை பரப்பும் வகையில், பரபரப்பான, தவறான தகவல்களை கொண்ட நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் வெளியிட்டால் உடனே ஒளிபரப்பை நிறுத்துமாறு கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டு இருக்கிறது,












Click it and Unblock the Notifications