குடும்பத்துக்கே சொல்லாமல் கொரோனாவால் இறந்தவரின் உடலை தகனம் செய்த அரசு மருத்துவமனை.. அதிர்ச்சி தகவல்
கொல்கத்தா: கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 70 வயது முதியவரின் உடலை அவரது குடும்பத்தினருக்கே தகவல் தெரிவிக்காமல் மருத்துவமனை நிர்வாகத்தினர் அடக்கம் செய்திருக்கிறார்கள். இந்த விஷயம் அவரை அடக்கம் செய்த நான்கு நாட்களுக்கு பிறகு குடும்பத்தினர் போன் போட்டு கேட்ட போது மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். இந்த அதிர்ச்சி சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்திருக்கிறது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் ஹரிநாத் சென் சஹா வயது 70. இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார்.
மூளை பக்கவாதம் காரணமாக அவரது உடலின் வலது பக்கத்தில் முடங்கிப்போனது. ஏப்ரல் 29 அன்று என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் மேற்கு வங்க மாநிலத்தின் முதல் கோவிட் மருத்துவமனையான எம்.ஆர்.பங்கூருக்கு மாற்றப்பட்டார்.

உடல் தகனம்
இந்நிலையில் அவரது உடல் நிலை குறிந்து தெரிந்து கொள்வதற்காக மே 5ம் தேதி மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்திருக்கிறார்கள். ஆனால் மருத்துவமனை ஊழியர்களிடம் இருந்து ஹரிநாத் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை .ஆனால் மே 6 அன்று, குடும்பத்தினர் மீண்டும் அழைத்தனர். அப்போது தான் நான்கு நாட்களுக்கு முன்பே ஹரிநாத் உடல் தகனம் செய்யப்பட்து என்ற தகவல் அவரது குடும்பத்தினருக்கு மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.

மரணம் அடைந்ததை சொல்லவில்லை
அதிர்ச்சியும் வேதனையும் அடந்த ஹரிநாத்தின் குடும்பத்தினர். தங்களின் தந்தையின் மரணம் குறித்தும், தகனம் செய்தது குறித்தும் எந்த தகவலையும் மருத்துவமனை பகிர்ந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்கள். ஹரிநாத்தின் சஹாவின் மகன் அரிஜித் சஹா இது குறித்து கூறுகையில், "மே 1 அன்று எங்கள் தந்தையின் நிலை மோசமடைந்தது என்று எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. அடுத்த நாள் அவரது மரணம் குறித்து அவர்கள் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை அவரது தகனம் பற்றிய தகவலும்தெரிவிக்கப்படவில்லை.

எங்கள் குடும்பமே முகாமில்
இவை அனைத்தும் நடந்துகொண்டிருந்தபோது, உடல்நிலை சரியில்லாத என் அம்மா, நானும் என் சகோதரமும் என் மனைவி மற்றும் என் சகோதரின் மனைவி என குடும்பத்தினர் அனைவரையும் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் மேற்கு வங்க அரசு வைத்திருந்தது. நாங்கள் மேற்கு வங்க சுகாதாரத்துறை அதிகாரிகளை அழைத்தபோது எனது தந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டது பற்றி கூட சுகாதாரத் துறைக்கு தெரியவில்லை

பெண் ஊழியர் சொன்ன தகவல்
தந்தை இறந்த தகவலை மறுபரிசீலனை செய்ய நாங்கள் மீண்டும் வார்டு மாஸ்டரை அழைத்தபோது, ஒரு பெண்மணி அழைப்பை எடுத்து கொல்கத்தா மாநகராட்சியால் சடலம் எடுத்துச் செல்லப்பட்டதாக முரட்டுத்தனமாக எங்களிடம் கூறினார். அவரிடம் நாங்கள் பெயர் கேட்ட போது நீங்கள் என் பெயரைத் தெரிந்து கொள்ளத் தேவையில்லை. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரே ஒரு பெண் ஊழியர் மட்டுமே இங்கு நியமிக்கப்பட்டுள்ளனர், அனைவருக்கும் அது தெரியும். முதலில் உங்கள் பெயரைச் சொல்லுங்கள், இல்லையென்றால் நான் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள மாட்டேன்" என்று அந்த பெண் தொலைப்பேசியில் காட்டமாக பேசினார்.

மருத்துவ ஆவணம் இல்லை
இறப்புச் சான்றிதழ் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. எம்.ஆர்.பங்கூர் மருத்துவமனையில் சஹா தங்கியிருப்பது தொடர்பான எந்த மருத்துவ ஆவணமும் பகிரப்படவில்லை. அந்த சான்றிதழை சேகரிக்க டாப்சியாவில் உள்ள கொரோனா தகனத்தை தொடர்பு கொள்ளுமாறு எங்களை கேட்டுக்கொண்டார்கள்" இவ்வாறு அர்ஜித் வேதனை தெரிவித்தார்

தொடர்பு கொள்ள முடியவில்லை
ஆனால் மருத்துவமனை நிர்வாகம் சஹா குடும்பத்தின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. தனியார் தொலைக்காட்சி ஊடகத்திடம் பேசிய மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சிசிர் நாஸ்கர், "குற்றச்சாட்டுகள் குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. குடும்பத்தின் சார்பாக எங்களுக்கு வழங்கப்பட்ட எண்ணை நாங்கள் தொடர்பு கொண்டோம். சரியான நடைமுறையின்படி, எங்கள் உதவி கண்காணிப்பாளர் இறந்தவரின் குடும்பத்தை அழைக்கிறார். குடும்பத்தை தொடர்பு கொள்ள முடியாவிட்டால், உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, நாங்கள் சுகாதாரத் துறைக்கு புகாரளிக்கிறோம். அதன்பிறகும் குடும்பத்தை தொடர்பு கொள்ள முடியாத சூழலில் தான் கொல்கத்தா மாநகராட்சி உடலை தகனம் செய்கிறது "என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications