மேற்குவங்கத்தில் கனமழை, வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளம்: 50 பேர் பலி
கொல்கத்தா: மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்களில் பெய்த கடும் மழைக்கு இது வரை 50 பேர் பலியானதாக கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் மட்டும் 39 பேர் பலி ஆனதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் கோமன் புயல் தாக்கியது. இதில் பயங்கர தேசம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் மியான்மரிலும் இருந்தது.
மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தா உள்பட மாநிலத்தின் தென் மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழையால், அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. பல இடங்களில் வாகனப் போக்குவரத்தும், ரயில் சேவைகளும் பாதிப்புக்குள்ளாகின.

விளைநிலங்கள் பாதிப்பு
மாநிலம் முழுதும் சுமார் 33,000 பேர் 700 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 2 ஹெக்டேர் நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சுமார் 5 லட்சம் குடிநீர் பாக்கெட்டுகள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பலத்த மழை காரணமாக, மேற்கு வங்கத்தின் தென் மாவட்டங்களான ஹவுரா, தெற்கு 24 பர்கானா, கிழக்கு மிதுனபுரி ஆகியவற்றில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. பல பகுதிகளில் மழை நீர், வெள்ளம் போல் தேங்கியுள்ளது. இதனால், வாகனப் போக்குவரத்தும், ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன.
கொல்கத்தாவில் வெள்ளம்
கொல்கத்தாவின் சில பகுதிகளில், மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மெட்ரோ ரயில் சேவையும், சிறிது நேரம் பாதிப்புக்குள்ளானது. பள்ளிகள், கடைகள், அலுவலகங்கள் அடைக்கப்பட்டன.
7 லட்சம் பேர் பாதிப்பு
மிட்னாபூர் , ஹவுரா உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆறுகளான சாலைகள்
தெற்குப் பகுதியான பெஹாலா மற்றும் வைஷ்ணப்தா ஆகிய இடங்களில் சாலைகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாறாக கிழக்குப் பகுதிகளில் மக்கள் ஆட்டோக்களுக்கு பெரிய தொகையைக் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ரூ.4 லட்சம் நிவாரணம்
இதனிடையே வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் வெள்ளத்திற்கு 39 பேர் பலியாகியுள்ளதாகவும், 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
ஜார்கண்ட் வெள்ளம்
ஒடிசா, ஜார்கண்ட், உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களும் கடும் மழையை சந்தித்தது. ஜார்கண்ட்டில் பெய்த 36 மணி நேர தொடர் மழையில் பல நதிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நதியோர மக்கள் லட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவு
மணிப்பூர் மாநிலத்தில் மழை காரணமாக பல பாலங்கள் இடிந்து விழுந்தன. அசாம், ஜம்மு காஷ்மீரிலும் பலத்த மழை பெய்து வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
வானிலை அறிவிப்பு
இதனிடையே 48 மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது வங்கதேசத்தில் மையம் கொண்டுள்ள கொமேன் புயல், குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை வரை மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் மிக பலத்த மழை பெய்யக்கூடும். சனிக்கிழமை காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 13.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications