உள்ளாட்சி தேர்தலால் கொதிக்கும் மே.வங்கம்.. நாட்டு வெடிகுண்டு வீச்சு.. பரபரப்பில் வாக்கு எண்ணும் மையம்
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் எச்சரித்துள்ளார். இதனிடையே, வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த 8 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. பஞ்சாயத்து சமிதிகள், கிராம ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு 22 மாவட்டங்களில் 73,887 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வேட்பாளர்களாக சுமார் 2 லட்சம் பேர் போட்டியிட்டனர். லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் தற்போதைய உள்ளாட்சித் தேர்தல் அனைத்து கட்சிகளுக்கும் மிக முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக மம்தா பானர்ஜிக்கு இது கவுரவ பிரச்சினையாக பார்க்கப்பட்டது. பாஜகவும் இந்த தேர்தலை தீவிரமாக எடுத்து கொண்டு செயல்பட்டது. இதனால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உள்ளாட்சி தேர்தலில் டென்ஷன் எகிறியது. தேர்தல் நடைபெற்ற போது வன்முறைச் சம்பவங்கள் உச்சத்தை எட்டின.வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல், தீவைத்தல் என வன்முறைகள் பெரும் பதற்றம் நீடித்தது. இத்தகைய வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்தது.
வன்முறை வாக்குப்பதிவு பாதிக்கப்பட்ட இடங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. அதாவது, நேற்று 650க்கும் மேற்பட்ட வாக்கு சாவடிகளில் மறுவாக்குப் பதிவும் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் தான் என்றாலும் மேற்கு வங்காளத்தில் நடந்த வன்முறை தேசிய அளவில் கவனம் பெற்றது. இந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மத்திய படை பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என மாநில ஆளுநர் ஆனந்த போஸ் கடுமையாக எச்சரிக்கை விடுத்து இருந்தார். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணும் பணி கட்டுப்பாட்டு அறைகளில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. உச்ச கட்ட பரபரப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்த வாக்கு எண்ணிக்கையில், பெரும்பாலான இடங்களில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
இதனிடையே, டைமண்ட் துறைமுகம் பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. தேர்தல் நடக்கும் நேரத்தில் தான் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது என்றால், வாக்குகள் எண்ணப்படும் போது அங்கு வெடிகுண்டு வெடித்துள்ளது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications