மேற்கு வங்கத்தில் கொரோனா கோரத்தாண்டவம்- ஒரே நாளில் 134 பேர் பலி; 19,445 பேருக்கு பாதிப்பு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 134 பேர் பலியாகி உள்ளனர். மேற்கு வங்கத்தில் இதுவரையிலான ஒருநாள் அதிக உயிரிழப்புகளில் இதுதான் முதல் முறையாகும்.
ஆக்சிஜன் பற்றாகுறையால் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு... திருப்பதியில் நிகழ்ந்த சோகம்..!
நாட்டின் பிற மாநிலங்களைப் போல மேற்கு வங்கமும் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 19,445 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
ஒரே நாளில் 134 பேர் மரணம்
தற்போதைய நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிற ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1,26,663. இம்மாநிலத்தில் ஒரே நாளில் நேற்று மட்டும் 134 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கொரோனா ஒருநாள் உயிரிழப்புகளில் மேற்குவங்கத்தில் இதுதான் மிக அதிகபட்சமாகும். மேற்கு வங்கத்தில் கொரோனாவுக்கு மொத்தம் 12,461 பேர் பலியாகி உள்ளனர்.
மே.வங்கம் டிஸ்சார்ஜ்
அதேநேரத்தில் ஒரே நாளில் 18,675 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மேற்கு வங்கத்தில் 8,73,480 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,12,604. கொல்கத்தா மற்றும் அதனை சுற்றிய 4 மாவட்டங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்து வருகிறது.
வடக்கு 24 பர்கான்ஸ் பாதிப்பு அதிகம்
இருப்பினும் ஞாயிற்றுக்கிழமையன்று வடக்கு 24 பர்கான்ஸ் மாவட்டத்தில்தான் அதிக அளவாக 3,971 பேருக்கு கொரோனா உறுதியானது. கொல்கத்தாவில் 3,948; ஹவுராவில் 1,147 பேருக்கும் தெற்கு 24 பார்கான்ஸ் மாவட்டத்தில் 1973, ஹூக்ளியில் 951 பேருக்கும் கொரோனா உறுதியானது.
மாவட்டங்களில் உயிரிழப்பு
அதேபோல் வடக்கு 24 பர்கான்ஸ் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று மட்டும் 42 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். கொல்கத்தாவில் 34பேரும் தெற்கு 24 பர்கான்ஸ் மாவட்டத்தில் 14 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.